பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. இல்லற இயல்பு

21


பிற ஒன்றைப் பெற வேண்டும் என்னும் நியதியே இல்லாமல் போகும். கற்புடைய மாதர் கைக்கொள்ள வேண்டிய ஒழுக்கங்கள் பலவாகும். அவற்றுள் ஒன்றாகத் தாம் மணந்த கணவன்மாரைத் தெய்வமெனத் தொழுதலாகும். இப்படிக் கணவனையே கடவுளாகத் தொழும் கற்புடைய மங்கை வேறு தெய்வத்தையும் தொழமாட்டாள். இப்படித் தொழாதது தவறும் அன்று. எந்த மாது தன் கணவனையே தெய்வமாகத் தொழுகின்றாளோ அவள் மழை பெய்யாமல் வரட்சி மிகுந்த காலத்திலும், மழையே பெய்க என மேகக் கூட்டங்கட்குக் கட்டளை இடுவாளாயின், மழையும் தடையின்றிப் பொழிந்தே தீரும். இவளுக்குத் தெய்வமே ஏவல் செய்யக் காத்திருக்கும்.

பெண்ணாகப் பிறந்த ஒவ்வொருவரும் தான் வயது வந்து ஒரு மணவாளனை மணந்த பின், தன்னைக் கற்பினின்று கவறாமல் இருக்கப் பார்த்துக்கொள்ள வேண்டும்; தன்னை மணம் செய்து கொண்டவனை உண்டி முதலியவற்றைப் பக்குவமாக சமைத்துக் கணவனை உண்பித்து அவனைப் போற்றி வருதல் வேண்டும். இப்படி இவள் ஒழுகத் தொடங்கினால் இவளுக்கும் இவளை மணந்த மணவாளனுக்கும் புகழ் ஏற்பட ஏதுவாகும். இந்தப் புகழ் நிலைக்குமாறு பார்த்துக்கொண்டு சோர்வு தட்டாமல் வாழ்க்கையை நடத்தவேண்டும்; மறதி என்பதை அறவே ஒழிக்க வேண்டும்.

சிலர், மாதர்களது கற்புக் கெடாமல் இருக்க வேண்டுமாயின், அவர்களைக் காவல் காத்து வருதல் இன்றியமையாதது என்று கருதுவர். அப்படிக் கருதுதல் கூடாது. அப்படி அம் மாதர்களை மதில் காவலாலும் வாயில் காவலாலும் காத்தல் முறையன்று. அது காவலும் ஆகாது. மாதர்