பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



 

திருமூலநாயனார் வரலாறு


திருக்கயிலாயத்திலே சிவபிரானது திருக்கோயிலில் முதற் பெருங்காவல் பூண்டவர் திருநந்திதேவர். அவரது திருவருள் பெற்ற மாணாக்கராகிய சிவயோகியார் ஒருவர். அவர் அணிமா முதலிய எண்வகைச் சித்திகளும் வாய்க்கப் பெற்றவர். அகத்திய முனிவர்க்கு நண்பர். அவருடன் சில நாள் தங்குதற்கு எண்ணிய சிவயோகியார் பொதிய மலையை அடைதற்கு எண்ணித் திருக்கயிலையினின்றும் புறப்பட்டுத் தென்திசை நோக்கி வந்தார். வரும் வழியில் திருக்கேதாரம், பசுபதி நேபாளம், அவிமுத்தம் (காசி) விந்தமலை திருப்பருப்பதம், திருக்காளத்தி, திருவாலங்காடு ஆகிய திருத்தலங்களைப் பணிந்து காஞ்சி நகரை யடைந்தார். திருவேகம்பப் பெருமானை இறைஞ்சிப் போற்றினார். அந்நகரிலுள்ள சிவயோகியர்களாகிய தவ முனிவர் பலருடனும் அளவளாவி மகிழ்ந்தார். பின்பு திருவதிகையை யடைந்து புரமெரித்த பெருமனை வழிபட்டுப் போற்றினர். இறைவன் அற்புதத் திருக்கூத்தாடியருளும் திருவளர் திருச்சிற்றம்பலத்தினைத் தன்னகத்தே கொண்டு திகழும் பொற்பதியாகிய பெரும்பற்றப்புலியூரை வந்தடைந்தார். அங்குக் கூத்தப்பெருமானைப் போற்றித் தம் உள்ளத்தே பொங்கியெழுந்த சிவஞானமாகிய மெய்யுணர் வினால் சிவானந்தத் திருக்கூத்தினைக் கண்டுகளித்து ஆராத பெருவேட்கையினால் தில்லைப்பதியில் சிலகாலம் தங்கியிருந்தார்.

தில்லைத் திருநடங் கண்டு மகிழ்ந்த சிவயோகியார், அங்கிருந்து புறப்பட்டுக் காவிரியில் நீராடி அதன் தென்கரையினை யடைந்தார். உமையம்மையார் பசுவின் கன்றாக