பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4


நீங்குதலாகிய இதனால் எனக்குப் பெருந் துன்பத்தைச் செய்துவிட்டீர்' என்று புலம்பி வாட்டமுற்றாள். நிறைதவச் செல்வராகிய திருமூலர் அவளைப் பார்த்து 'நீ எண்ணியபடி உனக்கு என்னுடன் எத்தகைய உறவும் இல்லை’ என்று சொல்லிவிட்டு அவ்வூரிலுள்ள பொது மடத்திற் புகுந்து சிவயோகத்தில் அமர்ந்திருந்தார்.

தன் கணவனது தன்மை வேறுபட்டதனைக் கண்ட மூலன் மனைவி, அது பற்றி யாரிடமும் சொல்லாமலும் தவ நிலையினராகிய அவர்பால் அணையாமலும் அன்றிரவு முழுதும் உறங்காதவளாய்த் துயருற்றாள். பொழுது விடிந்ததும் அவ்வூரிலுள்ள நல்லோரை யடைந்து தன் கணவனது நிலைமையை எடுத்துரைத்தாள். அதனைக் கேட்ட பெரியோர்கள் திருமூலரை யணுகி அவரது நிலையை நாடி உற்று நோக்கினார்கள். 'இது பித்தினால் விளைந்த மயக்கம் அன்று; பேய் பிடித்தல் முதலிய பிறிதொரு சார்பால் உளதாகியதும் அன்று; சித்த விகாரக் கலக்கங்களை யெல்லாம் அறவேகளைந்து தெளிவுபெற்ற நிலையில் சிவயோகத்தில் அழுந்திய கருத்தினராய் இவர் அமர்ந்துள்ளார். இந் நிலைமை யாவராலும் அளந்தறிதற்கு அரியதாகும்’ எனத் தெளிந்தார்கள். 'இவர் இருவகைப் பற்றுக்களையும் அறுத்து ஞானோபதேசத்தால் பரமர் திருவடியைப்பெற்ற சீவன் முத்தர்களைப் போன்று எல்லாவற்றையும் ஒருங்கே அறியவல்ல முற்றுணர்வுடைய முனிவராகத் திகழ்கின்றார். எனவே முன்னை நிலைமைப்படி உங்கள் சுற்றத் தொடர் பாகிய குடும்ப வாழ்க்கையில் ஈடுபடமாட்டார்’ என மூலன் மனைவிக்கு எடுத்துரைத்தார்கள். அது கேட்டு அவள் அளவிலாத் துயரத்தால் மயக்கமுற்றாள். அருகே யிருந்தவர்கள் அவளுக்குத் தேறுதல் சொல்லி வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.