அருள்முறைத் திரட்டு
55
(இ-ள்) சூரிய காந்தக் கல்லும் அதனைச் சூழ்ந்த பஞ்சும் போல் (உயிர்களின் மலத்தைச் சுட்டெரித்தற்குரிய சிவமும் அதனைப் பற்றாகப் பற்றிய ஆன்மாவும்) பிரிவற்ற இயைபுடைய வாயினும் சூரிய காந்தக்கல் தன்னகத்தேயுள்ள நெருப்பினால் தன்னைச் சூழ்ந்துள்ள பஞ்சினைச் சுட்டெரித்தல் இல்லை. அத்தகைய சூரிய காந்தக்கல் ஞாயிற்றின் முன்னிலையைச் சார்ந்தபொழுது அதனின்று தோன்றும் தீ பஞ்சினைச் சுட்டெரித்தல் போன்று (இறைவன்) குருவாகத் தோன்றிய அந் நிலையில் வெளிப்பட்ட சிவஞானத் தீயால் உயிரைச் சூழ்ந்த மலங்களாகிய பஞ்சுத் தொகுதி சுடப்பட்டழிந்தன. எ-று .
இறைவனை உயிர்க்குயிராகத் தன்னுள் கொண்ட பக்குவமுடைய ஆன்மாவுக்குச் சூரிய காந்தக் கல்லும், ஆன்மாவைப் பிணித்துள்ள மலங்களுக்குப் பஞ்சும், ஞானாசிரியன் முன்னிலையில் மாணாக்கனது அறிவின் கண்ணே சிவஞானம் வெளிப்பட்டு மலங்களை யழித்தற்கு சூரிய காந்தக்கல் சூரியன் சந்நிதியிற் பொருந்திய நிலையில் அதன்கண் நின்று தீ வெளிப்பட்டுப் பஞ்சினைச் சுட்டெரித்தலும் உவமையாகும். இத்திருமந்திரப் பொருளே விரித்து விளக்கும் முறையில் அமைந்தது,
“சூரியகாந்தக் கல்லி னிடத்தே செய்ய
சுடர்தோன்றி யிடச்சோதி தோன்று மாபோல்
ஆரியனும் ஆசான்வந் தருளால் தோன்ற
அடிஞானம் ஆன்மாவில் தோன்றும், தோன்றத்
தூரியனும் சிவன்தோன்றும் தானுந் தோன்றும்
தொல்லுலக மெல்லாந் தன்னுள்ளே தோன்றும்
நேரியனாய்ப் பரியனுமாய் உயிர்க்குயிராய் எங்கும்
நின்றநிலை யெல்லாம் முன்நிகழ்ந்து தோன்றும்”
(சுபக்-280)
எனவரும் சிவஞான சித்தியார் திருவிருத்தமாகும். ஆரியன்-ஆசாரியன்.