58
திருமந்திரம்
உன்னுருவிற் சுவையொளி யூறோசை நாற்றத்
துறுப்பினது குறிப்பாகு மைவீர் நுங்கள்
மன்னுருவத் தியற்கைகளால் வைப்பீர்க் கையோ
வையகமே போதாதே யானேல் வானோர்
பொன்னுருவைத் தென்னாரூர் மன்னு குன்றைப்புவிக்
கெழிலாஞ் சிவக்கொழுந்தைப் புகுந்தென் சிந்தைத்
தன்னுருவைத் தந்தவனை யெந்தைதன்னைத் தலைப்படுவேன்
துலைப்படுப்பான் தருக்கேன் மின்னே. (6–27–4)
எனவரும் திருத்தாண்டகம் இங்குச் சிந்தித்தற்குரியதாகும்.
அத்தம்-பொருள்; அப்பில்-நிலத்தியல்பால் திரியும் தண்ணீரைப் போன்று. அப்பு-நீர். சார்ந்ததன் வண்ணமாந் தன்மையுடைய ஆன்மா என்னும் குறிப்பினது. குறித்து - குறிக்கொண்டு. ஆண்டுகொள்-ஐம்புலன்களையும் அறிவின் வழி அடக்கி ஆண்டு பயன்கொள்க.
26. அப்பினிற் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்பெனப் பேர்பெற் றுருச்செய்த அவ்வுரு
அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோற்
செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே. (136)
ஆன்மா மலம் நசித்து இறைவனைச் சேர்ந்து ஒன்றுபடுமாறு உணர்த்துகின்றது.
(இ-ள்) (கடலிடத்தேயுள்ள) நீரின் மிகுந்த உவர்ப்பானது கதிரவனது வெப்பத்தால் உப்பு எனப் பேர்பெற்று உருக்கொண்ட அது மீண்டும் நீரிற் கலந்தபோது நீரேயாகுமாறுபோல முடிவாகச் சொல்லுமிடத்து ஆன்மா சிவத்துள் அடங்கும் எ-று.
அப்பு-நீர். கூர்மை-கடல் நீரில் உள்ள கரிப்பு. நீரிடத்தேயுள்ள கரிப்புத்தன்மை கதிரவன் வெப்பத்தால்