பக்கம்:திருமுருகாற்றுப்படை-மூலமும் உரையும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39



(தொடர்ச்சி)

(245-249) வெறியாடும் (சாமியாடும்) களங்கள் எதிரொலிக்குமாறு பாடி, பலவகை ஊது கொம்புகளை வாயில் வைத்து ஊதி, வளைந்த மணிகளை ஆட்டி ஒலிக்கச் செய்து, அழியாத ஆற்றலுடைய (முருகனது) யானையை வாழ்த்தி, வேண்டுவார் வேண்டுவனவற்றை வேண்டியபடி அடைந்தவராய் வழிபாடு செய்ய, அந்த அந்த இடங்களிலும் முருகன் அமர்ந்திருப்பதும் அறிந்த செய்தியேயாம்.

முருகனைப் போற்றும் முறை

(250-281) — (இதுகாறும் கூறிய) அவ்வவ் விடங்களிலே யாயினும் பிற இடங்களிலே யாயினும் முருகன் அமர்ந்திருக்க, அவன் உன்னைக் காணும்படி நீ முற்பட்டு அவனைக் கண்டக்கால், முகம் விரும்பிப் போற்றுதல் செய்து கையால் தொழுது கும்பிட்டுக் காலிலே பொருந்த விழுந்து வணங்கி (பின் வருமாறு முருகனை விளித்து, அஃதாவது:-)“நீண்டபெரிய இமயமலையின் உச்சியிலே நீலப்புல் (தருப்பை) வளர்ந்த பசுமையான சுனையிலே, விண், காற்று நெருப்பு, நீர், மண் என்னும் ஐந்தின் தெய்வங்களுள் ஒருவனான நெருப்புத் தேவன் (அக்கினி பகவான்) தன் அழகிய கையிலே ஏற்றுவரக் கார்த்திகைப் பெண்டிர் அறுவர் பெற்றெடுத்த ஆறு கூறாய் அமர்ந்துள்ள செல்வனே! கல்லால மரத்தின் கீழமர்ந்த கடவுளின் (சிவனின் ) மகனே! பெரிய மலையாகிய இமயமலையரசன் மகளாகிய உமையின் மகனே! பகைவர்க்கு எமனே! வெற்றிவேல் ஏந்திய போர்த்தெய்வமாகிய கொற்றவையின் குமரனே! அணிகலன் பூண்ட சிறப்புடைய பழம்பெருந் தெய்வமாகிய காடுகிழாளின் குழந்தையே! தேவர்கள் வணங்கும்-வில்லேந்திய படைகளின் தலைவனே! மாலையணிந்த மார்பனே! நூல்களைத் தெளிந்த புலவனே! போர்த் தொழிலில் ஒப்பற்றவனே! பொருகின்ற வெற்றி வீரனே! அந்தணர் செல்வமே! அறிஞர்களின் புகழ்ச்சொல் மலையே! தெய்வ யானே, வள்ளி ஆகிய மங்கையர்களின் கணவனே! மறமைந்தர்