பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30 ❖

திரும்பி வந்த மான் குட்டி



பொன்னனின் அப்பா அதிகாலையில் குளித்து விட்டு, அவருடைய அலுவலகத்தில் கொடி ஏற்றப் போய்விட்டார். அவர் வீட்டிலே இருந்தால், பொன்னனை இவ்வளவு நேரத்துக்குத் தூங்க விட்டிருப்பாரா?

சரியாக ‘டாண், டாண்’ என்று மணிக் கூண்டுக் கடிகாரத்திலே மணி பத்து அடித்தது. அதைத் தொடர்ந்து ‘தொப்’, ‘தொப்’பென்று நாலைந்து அடிகள் தொடர்ந்து விழுகிற சத்தமும் கேட்டது.

“டேய் பொன்னா, மணி பத்தடிச்சுடுத்து. இன்னுமா தூக்கம்? ம்... எழுந்திருடா” என்று சொல்லி, பொன்னனின் அப்பா அவனுடைய முதுகிலே அடித்த சத்தம்தான் அது!

‘சுதந்தர தினமாம் சுதந்தர தினம். இந்த வீட்டிலே தூங்கிறதுக்குக் கூட சுதந்தரம் இல்லை’ என்று முனு முணுத்தபடி, முதுகைத் தடவிக் கொண்டு, முகத்தைக் கோண வைத்துக் கொண்டு எழுந்தான் பொன்னன். பாயைச் சுருட்டி மூலையிலே வைத்தான். அடுக்களையை நோக்கி வேகமாக நடந்தான்.

“அம்மா, அம்மா, எனக்கு ரொம்பப் பசிக்குது. மணி பத்தாயிடுச்சு. பலகாரம் தாம்மா” என்று அவசரப் படுத்தினான்.

“பலகாரம் தாரேன். பல் துலக்கிட்டு வா.”