பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

376


எனது விருப்ப முயற்சி இங்ஙனமாக, அவத்தைகள் எல்லாவற்றையும் நீக்கி இத்தேகத்தை நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் எதனால் பெறுதல் கூடுமென்று அறியத் தொடங்கிய தருணத்து, வேறு எந்த வழியாலும் பெறுதல் கூடாது; எல்லாமுடைய கடவுளது 'திருவருட் சுதந்தரம் ஒன்றாலே' பெறுதல் கூடுமென்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்.

பின்னர் திருவருட் சுதந்தரம் நமக்கு எந்த வழியால் கிடைக்குமென்று அறியத் தொடங்கிய தருணத்து, எனது யான் என்னும் தேக சுதந்தரம், போக சுதந்தரம், சீவ சுதந்தரம் என்னும் மூவகைச் சுதந்தரங்களும் நீங்கிய விடத்தே கிடைக்கும் என்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்.

ஆகலில் எனது சுதந்தரமாகக் கொண்டிருந்த தேக சுதந்தரத்தையும், போகசுதந்தரத்தையும், சீலசுதந்தரத்தையும் தேவரீர் திருவருட்கே சர்வ சுதந்தரமாகக் கொடுத்துவிட்டேன். கொடுத்த தருணத்தே இத்தேகமும் சீவனும் போகப்பொருள்களும் சர்வ சுதந்தரராகிய கடவுள் பெருங்கருணையாற் கொடுக்கப்பெற்றன அன்றி நமது சுதந்தரதாற் பெற்றன அல்ல என்னும் உண்மையை அருளால் அறிவிக்கவும் அறிந்துகொண்டேன். இனி இத்தேகத்தினிடத்தும் சீவனிடத்தும் போகப் பொருள்களிடத்தும் தேவரீர் திருவருள் சாட்சியாக எனக்கு எவ்விதத்தும் யாதோர் சுதந்தரத் தோற்றமும் தோற்றமாட்டாது. தேவரீர் திருவருட் சுதந்தரத்தை என்னிடத்தே மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் தவிர்த்து இத்தேகத்தையே நித்திய தேகமாக்கி எக்காலத்தும்