பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36


னையும், தாம் தாம் மெய் எனத் துணிந்துள்ள கொள்கை பற்றிய ஒழுகலாறுகளையும் குறித்து வழங்கப் பெறுவதே சமயம் என்ற சொல் ஆகும். பண்டைத் தமிழியல் நூலாகிய தொல்காப்பியத்திலும், அதன் பின்னர்த் தோன்றிய சங்கத் தொகை நூல்களிலும் மதம் என்ற சொல்லோ, சமயம் என்ற சொல்லோ இடம் பெறவில்லை. பலவகைச் சமயங்களும் தோன்றி அவ்வச் சமயங்களின் பெயரால் தமிழ் மக்கள் தம்முட் பிரிவுபடுவதற்கு முன்னரே இயற்றப் பெற்ற தொன்மை உடையன தொல்காப்பியமும் சங்கத் தொகை நூலகளும், என்பது இதனால் நன்கு துணியப்படும்.

தொல்காப்பியர் காலத்திலே மாயோன், சேயோன் இந்திரன், வருணன் ஆகிய நானிலத் தெய்வங்களின் வழிபாடும், கொற்றவை வழிபாடும், நில வெல்லையினைக் கடந்த பொதுமை நிலையிற் சிவவழிபாடும் நிலைபெற்று வழங்கின என்பது முன்னர் விளக்கப்பெற்றது. இவ் வழிபாடுகள் யாவும் பலதிற மக்களும் தம் தம் சூழ்நிலைக் கும் தாம் தாம் உள்ளத்திற் கருதிய தெய்வத் தோற்றத்திற்கும் ஏற்ப மேற்கொண்டுள்ள தெய்வ வழிபாடுகள் என்ற பொதுமை நெறியில் நிகழ்ந்தனவே அன்றிப் பிற்காலத்திற் போன்று குறிகளாலும அடையாளங்களாலும் வேறுபட்ட தனிக் கொள்கையினையுடைய சமயங்களாக அவை வழங்கப் பெறவில்லை என்பதும், மக்களின் ஒற்றுமையைக் குலைக்கும் நிலையில் அவை வேறு பட்டுக் காணப்படவில்லை என்பதும் இங்கு மனங்கொள்ளுதற்குரியனவாகும்.

இனி, கடைச்சங்க காலத்தை யடுத்துத் தோன்றிய சிலப்பதிகாரம் மணிமேகலை என்னுங் காப்பியங்களில் தான் சிவவழிபாடு, திருமால் வழிபாடு, கொற்றவை