37
இவை இாண்டுபட்டானும் உயிர்கட்கு ஒர் முன்னிலை யான் அன்றி அறிவும் தொழிலுங் கூடாமை கூறப்பட்டன.
விளக்கம்: ஐம்பொறிகளாகிய கருவிகளின் துணையின்றி ஒன்றையும் உணரமுடியாத அறிவுக் குறைபாடுடையன ஆன்மாக்கள் என்பது உணர்த்துகின்றது.
பொறிகளாவன, உயிர்களின் அறிவு புறத்தே சென்று பொருள்களை யுணர்தற்கு வாயில்களாகவுள்ள மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகள். புந்தி-புத்தி; என்றது, ஆகுபெயராய் அதனை அகக்கருவியாகவுடைய உயிரை உணர்த்தி நின்றது. "புந்திக்கு அறிவு என்ற பேர் அற நன்று" என இயைக்க. உயிர்க்குச் சித்து என்பது ஒரு பெயராகலின் அதனையே ஈண்டு அறிவு என்ற பேர் எனக் குறித்தார், அற-மிகவும், நன்று என்றது, ஈண்டு இகழ்ச்சிக்குறிப்பாய் நன்றன்று என்பது பட நின்றது.
"கோளில் பொறியிற் குணமில வே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை (9)"
எனவரும் திருக்குறளில், உயிர்களின் உணர்வுக்குச் செவி முதலிய பொறிகள் இன்றியமையாத வாயில்களாதல் வலியுறுத்தப்பட்டமையால் அத்தகைய வாயில்களாகிய பொறிகளின் துணையின்றி ஒன்றையும் உணரமாட்டாத குறையுணர்வுடைய உயிர்களை முற்றுணர்வுடைய பிரமம் எனக்கொள்ளுதல் ஒரு சிறிதும் பொருந்தாதென்றவாறு. - (5)
அவ்வாறயின் ஆன்மாவுக்குத் தானேயுணரும் அறிவில்லையோ? என வினவிய மாணாக்கர்க்கு உணர்த்த உணரும் அறிவினையுடையது ஆன்மா என அறிவுறுத்துவது அடுத்து வரும் குறட்பாவாகும்.