40
உயிர்களுஞ் சித்தென்று வழங்கப்படுமாயினும் சிவனுடைய ஞானத்தினோடு ஒரு தன்மைய அல்லவென்பதாம்
சிவன் சீவ னென்றிரண்டுஞ் சித்தொன்றா மென்னிற் சிவனருட்சித் திவனருளைச் சேருஞ்சித் தவன்றான் பவங்கேடு புத்தி முத்தி பண்ணுஞ்சித் தவற்றிற் படியுஞ்சித் தறிவிக்கப் படுஞ்சித்து மிவன்றான் அவன்றானே யறியுஞ்சித் தாதலினா லிரண்டும் அணந்தாலு மொன்றாகா தனனிய மாயிருக்கும் இவன்றானும் புத்தியுஞ் சித்திவ னாமோபுத்தி இதுவசித்தென் றிடிலவனுக் கிவனு மசித்தாமே.
(சித்தியார்.சுப.320)
என்றருளிச் செய்தவாறு காண்க.
இதனால் உயிர்கள் சுத்த அறிவும் சடமும் அல்லவாதல் கூறப்பட்டது.
விளக்கம் : பசுவாகிய ஆன்மா, முற்றுணர்வுடைய சிவமாகிய சத்தும் ஆகாமல், உணர்வற்ற பாசமாகிய அசத்தும் ஆகாமல், சத்தைச்சார்ந்த நிலையிற் சத்தாகவும், அசத்தைச் சார்ந்த நிலையில் அசத்தாகவும் அவ்விருதிறப் பொருள்களையும் பற்றிச் சார்ந்ததன் வண்ணமாய் நின்றுணரும் தன்மைய தென்பது உணர்த்துகின்றது.
"சத்து அசத்தைச் சாராது அசத்து அறியாது; அங்கண் இவை உய்த்தல், சத் அசத்து ஆம் உயிர்" என மூன்று தொடராகப் பகுத்துப் பொருள்கொள்க. சத்து-தோற்றக் கேடுகள் இன்றி என்றும் மாறாதுள்ள பொருளாகிய சிவம். அசத்து-என்றும் ஒருநிலையவன்றி மாறுந் தன்மையவாகிய உலகப் பொருள்கள். சதசத்து-சத்தைச் சார்ந்த நிலையிற் சத்தெனவும் அசத்தைச் சார்ந்த நிலையில் அசத்தெனவும்