48
விளக்கம்: மேலை அதிகாரத்தால் பசுவிலக்கணம் கூறிய ஆசிரியர் ஆன்மாக்களோடும் அனாதியே கூடியுள்ள மலம் மாயை கன்மம் ஆகிய பாச இலக்கணம் கூறுபவர், ஏனை இரு மலங்கட்கும் மூலமாய் உயிரை முற்படப்பிணித்துள்ள ஆணவமாகிய இருள்மலத்தின் இயல்பினை விரித்துரைத்தலின் இவ்வதிகாரம் இருள்மல்நிலை யென்னும் பெயர்த்தாயிற்று.
இறைவனது பொருள் சேர்ந்த புகழை விரும்பினார்க்கு அகவிருளாகிய ஆணவமலத்தைப்பற்றிவரும் நல்வினை தீவினை என்னும் இருவினைகளும் உளவாகா என்பது,
"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு" (திருக்.5)
என வரும் திருக்குறளிற் கூறப்பட்டது. இதன்கண் 'இருள்' என்றது மயக்கத்தை எனவும், 'பொருள்' என்றது மெய்மையை எனவும் கொண்டு, மயக்கத்தைப்பற்றி வரும் நல்வினை தீவினை யென்னும் இரண்டு வினையும் உளவாகா இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து ; எனப் பரிமேலழகர் உரை வரைந்துள்ளார்.
"இருள்நீங்கி யின்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு” (352)
என்ற குறளில் மயக்கத்தினை மருள் என வேறோர் சொல்லால் ஆசிரியர் திருவள்ளுவர் வழங்கியிருத்தலால், அம் மருளின் வேறாக இருள் என்ற சொல்லாற் குறிக்கப்பட்டது, மயக்கமாக இருத்தல் இயலாது. இவ்வுலகிற் புறத்தே காணப்படும் பூத இருளானது, ஒரு பொருளையும் கண்ணாற் காணமுடியாத படி மறைத்து நிற்பது. இவ்வாறே உயிர்களின் அகத்தே அறிவுக்கண்களை மறைத்து நிற்பதாகிய இருளொன்று உண்டெனவும், அகவிருளாகிய அது, தன்தன்மையிதுவென உயிர்கள் உணராதவாறு உயிர்களின் அறிவினை மறைத்து நிற்ற