49
லால், ஆன்மாவாகிய பொருளையுங் காட்டாது அதனை மறைத்துள்ள தன்னையுங் காட்டாது நிற்குத் தனித்தன்மையுடைய தெனவும் ஆன்றோர் கூறுவர்.
உயிர்கட்கு ஊனத்தை விளைவிக்கும் இருள் என்பதொரு மலம் உண்டென்பதும், அவ்விருள் நீக்கத்திற்கு இறைவன் அறிவுறுத்தும் சிவஞானமாகிய பொருளையே துணையாகக் கொண்டு இறைவனது திருவருளைப் புகழ்ந்து போற்றி வழி படுதல் இன்றியமையாதென்பதும்
"ஊனத் திருள் நீங்கிட வேண்டில் ஞானப் பொருள்கொண் டடிபேணும்" (1-38-3)
'ஞானத்திரளாய் நின்ற பெருமான் நல்ல அடியார்மேல் ஊனத்திரளை நீக்கும் அதுவும் உண்மைப்பொருள் போலும்’ (1-69–3)
எனத் திருஞானசம்பந்தப் பிள்ளையார் அருளிய தேவாரத்தால் நன்கு புலப்படுத்தப் பெற்றமை காணலாம். ஆணவமாகிய இருள் நீங்கநோக்கும் ஞான நாட்டம், ஆன்மாக்கட்கு இயல்பாக அமைந்ததன்று என்பதும், இருளை நீக்கி உயிர்கட்கு இன்பமளிக்கவல்ல பேரருளும் பேரறிவும் பேராற்றலும் ஒருங்குடைய முதல்வன் இறைவன் ஒருவனேயென்பதும் திருமுறை யாசிரியர்களாகிய சிவநெறிச்செல்வர்களது துணிபாகும். இந் நுட்பம்,
'இருளற நோக்கமாட்டாக் கொத்தையேன்” (4-69-1)
'இருளறுத்து நின்று, ஈசனென்பார்க் கெலாம் அருள்கொடுத்திடும் ஆனைக்கா அண்ணலே (8-41-8)
'இருளாய வுள்ளத்தின் இருளை நீக்கி இடர் பாவங் கெடுத்து’ (6–54–4)
என வரும் அப்பர் அருள்மொழிகளால் இனிது விளங்கும். இங்ஙனம் உயிர்களின் அறிவினை அனாதியே மறைத்து நிற்ப