69
"மருளினை அருளால் வாட்டி மன்னுயிர்க் களிப்பன் கண்கட்கு இருளினை ஒளியால் ஒட்டும் இரவியைப் போல ஈசன்." (சித்தியார்-சுபக் 239)
என அருணந்தி சிவனாரும் முதல்வனது அருளைப்பற்றிக் கூறும் விளக்கங்கள் இங்கு நினைக்கத் தக்கனவாகும்.
அனாதியே இருள்மலத்தில் அழுந்தி அறிவுக் கண்களை யிழந்து உண்பொருள் நாடிப் புகலிழந்து குருட்டு நிலையில் நின்று அல்லற்படும் உயிர்த் தொகுதிகளை இருட்குழியினின்று தன் அருளாகிய கைகொடுத்துக் கரையேற்றி உய்வித் தருளுதல் இறைவனது திருவடியெனப் போற்றப்பெறும் திருவருளின் செயல் என்பதனை,
"இருள்தரு துன்பப்படல மறைப்ப மெய்ஞ்ஞானமென்னும் பொருள் தரு கண்ணிழந் துண்பொருள் நாடிப் புகலிழந்த குருடரும் தம்மைப் பரவக் கொடுநரகக் குழிநின் றருள் தரு கைகொடுத் தேற்றும் ஐயாற னடித்தலமே".
எனவரும் திருவிருத்தத்தில் திருநாவுக்கரசர் தெளிவாக விளக்கியுள்ளார். உயிர்கள் மேலே குறித்தவாறு அனாதியே பற்றியுள்ள இருள்மலப் பிணிப்பினின்று நீங்கி உய்தற்குத் துணைசெய்து உடன் நிற்பது இறைவனது திருவருளே யாதலின், இருள்மல நிலை என்னும் அதிகாரத்தையடுத்து அருளினது பெருமை கூறும் அருளதுநிலை என்னும் இவ்வதிகாரம் வைக்கப் பெறுவதாயிற்று.
எல்லா அறங்களுக்கும் மூலமாவது அருள் எனவும், அறத்திற்கும் அருளுக்கும் நிலைக்களமாகத் திகழ்வோன் அறவாழி அந்தணனாகிய இறைவன் எனவும் அறிவுறுத்திய திருவள்ளுவர், இல்லறத்தின் வழுவாதொழுகி அறிவுடைய