பக்கம்:திருவாசகத்தேன்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



புண் சுமந்த பொன்மேனி!

விளையாட்டு, விளையாட்டாக மட்டும் இருத்தலில் பயன் இல்லை. விளையாட்டின் போக்கிலேயே அறிவியல், அருளியல் கருத்துகளைக் கற்றுத் தரவேண்டும். அம்மானை என்பது பெண்கள் விளையாடும் ஒருவகை விளையாட்டு! அம்மானை விளையாடும் பெண்கள் பாடுவதாக அமைந்த பாடல்கள் உள்ள பகுதி திருவம்மானை என்று அழைக்கப் பெற்றது. திருவம்மானையில் இருபது பாடல்கள் உள்ளன. இந்த இருபது பாடல்களும் தத்துவச் செறிவுடைய பாடல்கள்! எளிய மொழி நடையில் அமைந்தவையும் கூட! இதுபோலவே பூவல்லி, பொற்சுண்ணம் என்பவையும் அமைந்துள்ளமையையும் அறிக.

அம்மானைப் பாடல்கள் வரிப்பாட்டு வடிவத்தில் அமைவன. திருவெம்பாவையைப் போலவே இந்த விளையாட்டும் கன்னிப் பெண்களால் நல்ல கணவனை நாடிப் பிரார்த்தனையுடன் விளையாடப் பெறுகிறது. இந்த அம்மானை விளையாட்டு, தமிழகத்தில் தொன்மைக் காலத்திலேயே விளையாடப்பெற்ற விளையாட்டு. திருவம்மானை பற்றிய விளையாட்டுக் குறிப்புக்கள் கலித்தொகையிலும் சிலப்பதிகாரத்திலும் காணப்படுகின்றன. அதுபோலவே திருமுறைகளிலும் திருவம்மானை விளையாட்டு பற்றிய குறிப்புக்கள் காணக்கிடக்கின்றன.