பக்கம்:திருவாசகத்தேன்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

வேண்டுமாயின் பணிவு வேண்டும், விரும்பி அன்பு செய்யப் பழகுதல் வேண்டும். அன்பும் நுண்ணறிவும் ஒருசேரப் பெற்றால் எதையும் சாதிக்கலாம். வாணிகப் போக்கில்- வாணிகக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் அன்பு ஒன்றுக்கு பத்து மடங்காகப் பயன் தரக்கூடியது. அன்பு தன்னையே கொடுக்கும். உண்மை, அறிவுக்குப் புலனாகாது. அன்புக்கே உண்மை புலனாகும். வாழ்க்கை என்ற கோட்டையை வலிமைப்படுத்த வேண்டுமாயின் அது நட்புறவால்தான் இயலும். அன்பு கொள்வதும் அன்பு பெறுதலும் மனித வாழ்க்கையின் தலையாய கடமை. உலகத்தில் மற்றெல்லாவற்றிற்கும் அழிவுண்டு. ஆனால் அன்புக்கு அழிவில்லை. அன்பிலும்கூடப் பிரிவு வருதல் உண்டு. பிரிவு, சிறிது காலமாக இருந்தால் அன்பு வளரும். பிரிவு நீடித்தால் துன்பந்தரும்; வதைக்கும்.

மாணிக்கவாசகர் தமக்கும், இறைவனுக்கும் இடையில் ஏற்பட்ட பிரிவை நீடிக்க விரும்பாமல் அழுது புலம்பிய புலம்பல்தானே! திருவாசகம்! தீங்கிழைத்தவரிடத்திலும் அன்பு காட்டுவதுதான் உண்மையான அன்பு. இங்ஙனம் தீங்கிழைத்தாரிடத்திலும் அன்பு காட்ட மனிதனால்தான் முடியும். அறியாமையாலேயே தீங்கிழைக்கிறான் என்று எண்ண வேண்டும். “அறியாமல் செய்கிறார்கள், மன்னித்து விடுக” என்று இயேசுபெருமான் செய்த பிரார்த்தனையை நினைவிற் கொள்க.

பிறந்தவர்கள் அனைவரும் இறப்பது உறுதி. அதற்குள் ஏன் அன்பில் வறட்சி என்று எண்ணி அன்பு காட்டவேண்டும். கடவுள் மனிதனுக்கு மட்டும் கொடுத்துள்ள ஒரே ஒரு கொடை அன்புதான்! அன்பு அரும் பொருள். அதனை இழந்தால் திரும்பப் பெறுவது கடினம். அன்பு, உள்ளத்தை உயிருடனும் உயிரை உடலுடனும் பிணைக்கும் ஒரு தளை. “அறிவு இறை வன்னத் தேடுகிறது. அன்புதான் இறைவன் உறைவிடம் என்பதை அறிந்து கொண்டாரில்லை. அன்புதான்