பக்கம்:திருவாசகத்தேன்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன் ☐ 59


“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு”


என்கிறது. இதில் மரபு வழி காணும் பொருள் நிற்கப்புதிய கோணத்தில் பார்க்கலாமே! பழைய காலத்தில் ‘அ’ எழுத்து பெரியதாக இருக்கும். ‘அ’ என்ற எழுத்தின் மேற்பகுதியில் ஒரு புள்ளியில் தொடங்குகிறது. அந்த வட்டமானது கோணல் இல்லாதது. கோணல் இல்லாத வட்டம் “குறைவிலா நிறைவை”க் குறிக்கும். அது பரம்பொருள்- சிவம்! அந்த வட்டத்திலிருந்து எழுத்து தொடங்கி கீழிறங்குகிறது. இது, பரசிவம் உயிர்களை நோக்கி இறங்கி வருவதைப் புலப்படுத்துகிறது. ‘அ’ எழுத்தின் கீழ்ப்பகுதி வளைவுள்ளது; நடுப்பகுதி தொந்தி போல வளைந்து தொங்கும். இந்தப் பகுதி உயிர் தன் முனைப்பில் வாழ்க்கையை நடத்தும் பாங்கைக் குறிப்பது. பின் எழுத்து வளைந்து மேல் நோக்குகிறது. மேல் நோக்கும் மையத்தில் எழுத்து தடித்து இருக்கிறது. மெல்லிய கோடு இந்த ஆணவம் அடங்குதலைக் காட்டுகிறது. குறிக்கோள் சார்ந்த வாழ்க்கை. கூர்மைப்படுத்தப்படுகிறது. இதுவரையில் உயிருக்கே உரிய அறியாமையைத் தொடர்ந்து வந்து உயிருக்கு நுகர்வனவெல்லாம் அருளிப் பக்குவப்படுத்தி வந்த சிவம், இந்த இடத்தில் உயிரை முந்திச் சென்று வழிகாட்டுகிறது. அழைத்துச் செல்கிறது. ‘அ’ எழுத்தின் மேற்பகுதி நேர் கோடு. சிவம் உயிரை, பிறவியென்ற வளையத்திலிருந்து விடுதலை செய்து இன்ப அன்பில் திளைக்க வைக்கிறது. அதன் அடையாளம் ‘அ’ என்ற எழுத்து வளைவுகளைக் கடந்து நேர் கோட்டில் முடிகிறது. சிவம் உயிர்களை ஆட்கொண்டருளும் பாங்கினை எடுத்துக்காட்ட இது ஒரு எளிய விளக்கமாகும்.

மாணிக்கவாசகர் அமைச்சராகப் பணி செய்தார். அவர் தம் அமைச்சுப் பணி சிறப்பாகவே அமைந்திருந்தது.