பக்கம்:திருவாசகத்தேன்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன் ☐ 65

இலாதார் வாழ்ந்தமையால் அது பெருந்துறையாயிற்று. பெருந்துறை! திருப்பெருந்துறை! திருநலஞ்செறிந்து திருப்பெருந்துறை! மக்களாகப் பிறந்தோர் அனைவரும் விரும்பும் பெருந்துறை! பெருந்துறை பெருந்துறை என்று பேசியே துன்பங்கெடுத்து வாழலாம். இருளகற்றி இன்பம் பெருக்கித் துன்பத்தின் தொடர்பு அறுத்து, வாழ்தல் கூடும் திருப்பெருத்துறையைச் சார்ந்தால் திருப்பெருந்துறைப் பெருமானே! ஆன்மாக்களிடத்தில் பிணக்கிலாத பெருமானே! உன்னை ஏசினும் ஏத்தினும் பிணக்குக் கொள்ளாது அருள்பொழியும் பெருமானே! உன் நாமங்களையே பேசுவர்! இங்ங்னம் திருப்பெருந்துறைச் சிவபெருமான் திருநாமத்தையே பேசுபவர்களுக்கு எதிர்வரும் துன்பம் துடைக்கப்பெறும்.

நேற்றைய துன்பம் அறியாமையால், விளைந்தது! இன்று அதன் தொடர்ச்சி! ஏன் எதிர்வரும் காலத்திலும் துன்பம்! அந்த எதிர்வரும் துன்பத்தையேனும் தடுத்தலாகாதா? தடுக்கலாம்! எப்படி? எப்போதும் பிணக்கிலாது வாழ்க! பிணக்கிலாத பெருந்துறையைச் சேருக! திருப்பெருத்துறையுறை பெருமானின் திருநாமங்களைப் பேசுக! எதிர்வரும் துன்பம் துடைக்கப்பெறும்! இணையில்லாத இன்பமும் வந்தடையும் திருவருளின்பம் இச்சையினால் அடையக்கூடியதொன்றன்று! தவத்தால், சீலத்தால், நோன்பால் மட்டுமே எய்த முடியும்!

பிறவிக்கு- பிறவித் துன்பத்துக்கு வித்து ஆணவம்! ஆன்மாவை இயல்பாகவே பற்றியிருப்பது ஆணவம்! இந்த ஆணவம் என்றும் காயாமல் முளைக்கும் இயல்பினது ஆணவத்தை அழித்தல் இயலாது. ஆணவத்தின் செயல் திறனை முடக்கலாம். ஆணவத்தின் ஆற்றலை அடக்கலாம். வினை செயல் உயிரின் இயல்பு. மனிதத்துக்கு வினையே உயிர்! வினைகள் என்றால் செயல்கள் என்று பொருள்! செய்யும் செயல்களே பயன் தந்து விடுவதில்லை; செயல் செய்வதன் நோக்கம் என்ன?

தி- 5