பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2



இதற்கு முந்திய பாடலில் 'நினைக் காண நெகும் அன்பில்லை' என்று வருந்தினார் அல்லவா? அன்பு என்பது, தானே பிறக்கவேண்டிய ஒன்றாகும். அந்த அன்புதானும் நெகும் அன்பாக, அதாவது மனத்தையும் உள்ளத்தையும் உருக்கும் அன்பாக இருத்தல்வேண்டும். எதுபற்றி இந்த அன்பு தோன்ற வேண்டும்? ‘நினைக்காண' என்று கூறினார். ஆதலின், அவரைக் காணவேண்டும் என்ற ஒரே கருத்தில் பொறி, புலன்கள், மனம், சித்தம் ஆகிய அனைத்தும் ஈடுபடவேண்டும். அவை ஈடுபட்டன என்பது எப்படித் தெரியும்? மனமும் உள்ளமும் உருகும் நிலை ஏற்பட்டால் அவை ஈடுபட்டன என்பது நன்கு தெரியும். அந்த நிலை வந்தவுடன் இறைவன் வெளிப்பட்டு நிற்பான்.

திருப்பெருந்துறை நிகழ்ச்சிக்குப் பிறகு அவரை மறுபடியும் காணவேண்டும் என்ற ஒரே எண்ணம், முழுவதுமாக அடிகளாரை ஆட்கொண்டிருக்கவேண்டும். அது சித்திக்காத நிலையில் தம் குறையை நினைந்து வருந்துதலும் என்ன செய்தால் அது கிட்டும் என்று ஏங்குதலும் சென்ற ஐம்பது பாடல்களில் பேசப் பெற்றுள்ளன.

அடிகளாரின் ஏக்கம்கண்ட இறைவன், நெகும் அன்பு அவர்பால் வந்துவிட்டமையின், குரு வடிவில் இல்லாமல் தன் சுய வடிவில் காட்சியளித்தான் போலும். அந்தக் காட்சியைக் கண்டு உருகிய அடிகளார் 'போற்றி, போற்றி' என்று அவனை வழுத்தத் தொடங்குகிறார்.


66. போற்றியோ நமச்சிவாய
புயங்கனே மயங்குகின்றேன்
போற்றியோ நமச்சிவாய
புகல் இடம் பிறிது ஒன்று இல்லை
போற்றியோ நமச்சிவாய