பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 105


'ஐயா! நின் கழற்கண் பொய்க்கலப்பு இல்லாத மெய்யன்பு பூண்டிருத்தல் வேண்டும்.

அத்தகைய மெய்யன்பு எனக்கு இப்பிறவியில் கிட்டாதாயினும் மாண்டு மாண்டு, பிறந்து பிறந்து நின்னை வணங்கவும் அவ்வாறு வணங்கும்போதெல்லாம் என் விருப்பம் நிறைவேறவும் வேண்டும்’ என்று இறைஞ்சுகிறார்.

'மாண்டு மாண்டு வந்து வந்து மன்ன! நின் வணங்கவே நாயினேனை ஆண்டுகொண்டு ஆவ என்று அருளு நீ' என்று கொண்டுகூட்டுச் செய்தால் ‘ஆவ’ என்ற சொல்லின் சிறப்புப் பொருள் விளங்கும். பல பிறவிகள் எடுத்து மாண்டு மாண்டு வளர்ச்சி அடைந்து நின் கழற்கண் மெய்யன்பு செய்ய வேண்டும் என்று நான் வேண்டிக்கொள்ளும்பொழுது 'அது அங்ஙனமே ஆகட்டும்’ (ஆவ என்று அருள) என்று என்பால் இரங்கி, இச்சொற்களைச் சொல்லி என் அச்சத்தைப் போக்கு வாயாக. இக்கருத்தையே 'ஆவ’ என்ற சொல்லின் மூலம் பெறவைக்கிறார் என்றலுமாம்.

வடமொழியில் திருக்கோயிலில் வழிபாடு நடைபெற்ற பின்னர், தங்களுக்கு என்ன என்ன வேண்டும் என்று இறைவன்முன் விண்ணப்பம் செய்வது மரபு. இவ் விண்ணப்பத்தை ஒருவரோ அன்றி ஒரு சிலரோ சேர்ந்து சொல்லியதன் பின்னர், தனியொருவர் தம் குரலை உயர்த்தி “ததாஸ்த் து’ என்று கூறுவதை இன்றும் திருக்கோயில்களில் காணலாம். இதே கருத்தில்தான் அடிகளாரும் தம் விண்ணப்பத்தை இரண்டு அடிகளில் கூறிவிட்டு 'ஆவ என்று அருளு நீ' என்று பாடிச் செல்கிறார்.