பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6. நீத்தல் விண்ணப்பம்

அந்தாதித் தொடையிலுள்ள நூறு பாடல்களைக் கொண்ட திருச்சதகத்தின் பின்னர், நீத்தல் விண்ணப்பம் என்ற இப்பகுதி வைக்கப்பெற்றுள்ளது. திருப்பெருந்துறையில் குரு வடிவில் இருந்தவர், அடிகளாருக்கு அருள்செய்த பின்னர் மறைந்துவிட்டார் என்பதை முன்னர்க் கண்டோம்.

குருநாதர் 'பொதுவினில் வருக' என ஆணையிட்டு மறைந்த பின்னர், அடிகளாரின் கலக்கம் மிகப் பெரிதாக வளர்ந்துவிட்டது. நாட்கள் செல்லச் செல்ல இறைவன் இங்குத் தம்மை விட்டுச் சென்றதற்கு ஒரு காரணம் உண்டு என்பதை உணர்ந்துகொண்டார். ஆதலின், ‘ஏல என்னை இங்கொழித்து அருளி' (திருவாச 2-129) என்று பாடினார். அப்படி ஒழித்தமைக்குக் காரணம் பராஅமுது ஆக்குவதற் காகவே என்பதையும் உணர்ந்துகொண்டார்.

விட்டுச் சென்றமைக்குக் காரணத்தை இவ்வளவு தெளிவாக அகவல்களில் கூறிய அடிகளார் பிரிந்திருப் பதற்கு மீட்டும் கவலை கொள்கிறார். இது ஏன்?

எல்லை மீறிய இன்ப அனுபவத்தைப் பெற்று அது தம்மைவிட்டு நீங்கியமையின் அது மறுபடியும் வேண்டும் என்று நினைப்பது மனித இயல்பு. அன்றியும் 'மீட்டு இங்கு வாரா வினைப்பிறவி சாராமே' அருள்வானைக் (திருவாச 1.87) குருவடிவில் நேரே கண்டு, திருவடி தீட்சையும் பெற்றபின்னரும் இந்த உடம்பும் அதனோடு தொடர்புடைய மனமும் இந்தப் பொறி, புலன்களும் தம்மைவிட்டு நீங்கவில்லை என்பதைப் புரிந்துகொள்கிறார்.