பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீத்தல் விண்ணப்பம் * 137


இப்பாடலும் முன்னர்க் கூறப்பெற்ற மகளிர் தொடர்புபற்றியே பேசுகின்றது.

இறுதி அடியில் வழியில் நின்று ஆரமுது ஊட்ட குருநாதர் காத்துக்கொண்டு இருந்ததையும் அந்த வாய்ப்பை நழுவவிட்டதையும் பேசுகின்றார்.

‘மறுத்தனன்’ என்ற சொல்லை அடிகளார் சொல்லியிருந்தாலும் உண்மையில் குருவின்பின்னே செல்ல இவர் மறுக்கவில்லை. திருவடியைப் பற்றிய கை நெகிழாமல் இந்த உடலை இங்கே துறந்துவிட்டு அவருடன் போயிருக்க வேண்டுமென்பதே அடிகளாரின் பேரவா ஆகும். உடலை விடமுடியாமையின் மறுத்தனன் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். அப்படி இருந்தாலும் தம்மைக் கைவிட வேண்டா என்று விண்ணப்பிக்கின்றார்.

110.

மறுத்தனன் யான் உன் அருள்
அறியாமையின் என் மணியே
வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய்
வினையின் தொகுதி
ஒறுத்து எனை ஆண்டுகொள் உத்தரகோச
மங்கைக்கு அரசே
பொறுப்பர் அன்றே பெரியோர் சிறு
நாய்கள் தம் பொய்யினையே
  6

ஒறுத்து - அடக்கி

பெருமானே! பெரியோர் என்பவர்கள் சிறியோர் பிழையைப் பொறுப்பதனால்தானே பெரியோர்கள் ஆயினர். 'சிறு நாய்கள்தம் பொய்யினையே’ என்று பன்மையால் கூறியது ஒரு பழமொழி போல இதனைக் கூறுவதற்கேயாம்.