பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீத்தல் விண்ணப்பம். 145



117.

கடலினுள் நாய் நக்கிஆங்கு உன் கருணைக்
கடலின் உள்ளம்
விடல் அரியேனை விடுதி கண்டாய்
விடல் இல் அடியார்
உடல் இலமே மன்னும் உத்தரகோச
மங்கைக்கு அரசே
மடலின் மட்டே மணியே அமுதே
என் மது வெள்ளமே

13

உடல் இலமே மன்னும் உடலை வீடாகக்கொண்டு நிலை பெற்ற, மடலின் மட்டு-பூவிதழிலுள்ள தேன்; குடித்தலில்லாத தேன். எனினும் ஆம்.

'ஆறு நிறையத் தண்ணிர் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்’ என்பது இந்நாட்டு முதுமொழி. அதுபோலத் திருப்பெருந்துறையில் குருவின் கருணை வெள்ளம் கடல்போல் பரந்துநின்றபோதும், நாய் நக்கிக் குடிப்பது போல் ஒரு சிறுபொழுதே அதனை அனுபவித்தார். ஆற்றுத் தண்ணீரை நக்கிக் குடித்த நாய் ஆற்றைவிட்டு வெளியேறி வீட்டுக்கு வந்தபிறகும், சிறிதளவுதானே குடித்தோம்; இன்னும் கொஞ்சம் குடித்திருக்கலாமே என்று நினைப்பதுபோல் திருப்பெருந்துறையில் கருணைக் கடலில் ஒரு சிறுபொழுதே மூழ்கியிருந்த அடிகளார், அந்த அனுபவத்தில் நிலைக்கவும் முடியாமல், விட்டுவிடவும் முடியாமல் தவிக்கின்ற மனநிலையை இங்குப் பேசியுள்ளார்.

இறைவன் எங்கே தங்குகிறான் என்பதை இரண்டாவது அடி பேசுகிறது. 'விடலில் அடியார்’ என்றதால் ஒரு கணநேரமும் அவன் நினைவினை விட்டுநீங்காத அடியார் என்பது பொருளாகும். அப்படிப்பட்டவர்கள் உள்ளக் கோயிலில் தங்கியிருப்பவன் என்பதே கருத்தாகும்.