பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2



இப்பொழுது ஒரு நியாயமான ஐயம் தோன்றினால் தவறில்லை. குருவினிடம் இருக்கும்போது அந்த இன்ப அனுபவம் உடல் முழுதும் நிரம்பி மயிர்க்கால்தோறும் நின்றது என்று அடிகளாரே முன்னர்க் கூறியுள்ளார். அம்மட்டோடு அல்லாமல் அமுத தாரைகள் ஏற்புத் துளைதொறும் ஏற்றப்பட்டன என்றும் அவரே கூறியுள்ளாரே! இவை இரண்டும் உடலுடன் இருக்கும் போதுதானே நடைபெற்றன?

அப்படியிருக்க, இப்பொழுது ‘கலந்தருள வெளிவந்திலேன்’ (உடம்பைவிட்டு நீங்கினேனில்லை) என்று கூறுவது சரியானதா என்ற ஐயம் நியாயமானதே ஆகும். ஆழ்ந்து சிந்தித்தால் உண்மை விளங்கிவிடும்.

உடம்போடு இருக்கும்பொழுதே இந்த அனுபவம் கிடைத்தது உண்மைதான். ஆனால், எப்பொழுது? அனைத்தையும் வைத்து வாங்கும் பரம்பொருள் குருவடிவில் எதிரேயுள்ளார். அவர் திருவடி பட்டதால் உடம்பு தன் பழைய நிலை மாறிப் புதுத் தன்மை பெற்றுவிட்டது. அனுபவத்தைத் தருகின்றவர், தம் திருவடி மூலம் நேரடியாக அனுபவத்தை உள்ளே செலுத்துகிறார். அந்தப் பேராற்றலின் எதிரே உடம்பின் இயல்புகள் முற்றிலுமாக மறைந்துவிட்டன. அன்றியும் அனுபவத்தை முற்றிலும் பெற்றபொழுது அடிகளாருக்குத் தேகப் பிரக்ஞை இல்லை எனவே, அப்பொழுது உடம்புடன் இருக்கும்போதே அனுபவம் கிடைத்தது.

இப்பொழுது நிலமை முற்றிலும் மாறிவிட்டது. குரு எதிரே இல்லை. அடிகளாரின் உடலும் தன் இயல்பான நிலைமைக்குத் திரும்பிவிட்டது. இந்த உடலுடன் அந்த அனுபவத்தைப் பெற முடியாது. ஆகவேதான், 'கலந்தருள வெளிவந்திலேன்’ என்கிறார்.