பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீத்தல் விண்ணப்பம் * 149


120.

என்னை அப்பா அஞ்சல் என்பவர் இன்றி
       நின்று எய்த்து அலைந்தேன்
மின்னை ஒப்பாய் விட்டிடுதி கண்டாய்
       உவமிக்கின் மெய்யே
உன்னை ஒப்பாய் மன்னும் உத்தரகோச
       மங்கைக்கு அரசே
அன்னை ஒப்பாய் எனக்கு அத்தன் ஒப்பாய்
       என் அரும் பொருளே 16

திருவடியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்; திருப்பெருந்துறை அனுபவத்தைத் தந்தருள வேண்டும். அதற்குத் தடையாகவுள்ன இந்த உடலைப் போக்கியருள வேண்டும் என்றெல்லாம் இதுவரை அடிகளார் கூறிக் கொண்டிருந்தார். இவை ஒன்றும் நடைபெறாதபோது, தம் வாழ்க்கையே பயனற்றதாகிவிடுமோ என்ற மிகப்பெரிய அச்சம் அவரை ஆட்கொண்டது. அந்த மனநிலையில் இப்பாடல் தோன்றுகிறது.

தம்மை அஞ்சல் என்று சொல்லக்கூடியவர்கள் யார்? தாய், தந்தை முதலியவர்கள்தாமே. எனவே, 'எனக்கு அன்னையும் அத்தனும் நீதானே! நீ அஞ்சாதே என்று ஒரு வார்த்தைகூடச் சொல்லக்கூடாதா' என்ற கருத்தில் பேசுகிறார்.

'எய்த்து அலைந்தேன்’ என்பது ஊர்ஊராகச் சென்றும் கோயில் கோயிலாகச் சென்று வழிபட்டும் ‘அஞ்சேல்' என்ற சொல்லை அவன் சொல்லவில்லை என்பதாகும்.

இதே கருத்தை 'அருளா தொழிந்தால் அடியேனை அஞ்சேல் என்பார் யாரிங்கு (திருவாச: 385) என்றும் ‘அஞ்சேல் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய்' (திருவாச: 427) என்றும் பின்னரும் பாடியுள்ளமையைக் காணலாம்.