பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீத்தல் விண்ணப்பம் * 151


122.

இருந்து என்னை ஆண்டுகொள் விற்றுக்கொள்
     ஒற்றி வை என்னின் அல்லால்
விருந்தினனேனை விடுதி கண்டாய்
      மிக்க நஞ்சு அமுதா
அருந்தினனே மன்னும் உத்தரகோச
      மங்கைக்கு அரசே
மருந்தினனே பிறவிப் பிணிப்பட்டு
      மடங்கினர்க்கே 18

ஒற்றி-முதலுக்கு ஈடாக வைக்கப்பட்ட சொத்து மடங்கினார்க்கு-தாழ்ந்தவர்க்கு.

'ஐயா! முன்பின் வாராமல் இப்பொழுது புதிதாக வந்த விருந்தினரைப்போல் உன்பால் அடைக்கலப்பட்டேன். நான் விரும்புவதெல்லாம் நீ என்னுள் தங்கி இருந்து, பிறகு, விருப்பத்தோடு என்னை ஆட் கொண்டாலும் சரி; நான் உனக்குப் பயன்படமாட்டேன் என்று விற்றுவிட்டாலும் சரி, ஆட்கொள்ள, இப்பொழுது எனக்குத் தகுதியில்லை, அந்தத் தகுதி வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று நீ கருதினால் அதுவரை ஆரிடமாவது என்னை ஒற்றியாக வைத்தாலும் சரி. இம் மூன்றில் எதை வேண்டுமானாலும் செய்துகொள். ஆனால் தயை கூர்ந்து என்னை விட்டுவிடவேண்டாம்' என்றவாறு.

123.

மடங்க என் வல் வினைக் காட்டை
     நின் மன் அருள் தீக் கொளுவும்
விடங்க என்தன்னை விடுதி கண்டாய்
      என் பிறவியைவே
ரொடும் களைந்து ஆண்டுகொள் உத்தரகோச
      மங்கைக்கு அரசே
கொடும் கரிக்குன்று உரித்து அஞ்சுவித்தாய்
      வஞ்சிக் கொம்பினையே 19

மடங்க-எல்லாம். விடங்க-சுயம்புமூர்த்தியே.