பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2



வித்துறுதல் - ஒளியடைதல்; அதாவது தீப்பற்றுதல். மிலைச்சி-சூடி. தத்துறு-தவழுகின்ற. ஆரம்-சந்தனக்கட்டை, சச்சையன்-நுட்பமானவன்.

‘மத்து உறு தண்தயிர்' என்றதனால், கலக்கமில்லாமல் அமைதியாக இருந்த தயிர் மத்தின் தொடர்பு ஏற்பட்டவுடன் தானும் கலங்கி அம்மத்திலும் ஒட்டிக்கொண்டது போல், 'ஐம்புலன்கள் நான் கிடைத்தவுடன் தீப்போல் என்னைப் பற்றிக்கொண்டன. என்னைக் கைவிட்டு விடாதே’ என்கிறார்.

135.

சச்சையனே மிக்க தண் புனல் விண்
     கால் நிலம் நெருப்பு ஆம்
விச்சையனே விட்டிடுதி கண்டாய்
      வெளியாய் கரியாய்
பச்சையனே செய்ய மேனியனே
     ஒண் பட அரவக்
கச்சையனே கடந்தாய் தடம் தாள
     அடல் கரியே 31

மிக்க-வெளிப்பட்ட விச்சை-வித்தை தடந்தாள் அடல் கரி. பருத்தகாலினையுடைய வலிய யானை.

‘வெட்சிப்பூப் போன்ற நிறத்தை உடையவனும், வெண்மை, கருமை, பச்சை, சிவப்பு ஆகிய நிறங்களைப் பெற்றுள்ளவனும், ஐம்பெரும் பூதங்களைத் தோற்றுவிக்கும் வித்தையை அறிந்தவனும் ஆகிய பெருமானே என்னைக் கைவிட்டுவிடாதே’ என்கிறார்.

136.

அடல் கரிபோல் ஐம் புலன்களுக்கு
     அஞ்சி அழிந்த என்னை
விடற்கு அரியாய் விட்டிடுதி கண்டாய்
    விழுத் தொண்டர்க்கு அல்லால்