பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீத்தல் விண்ணப்பம் * 179


தன்னை அடக்கி ஆண்டு நிலைகுலையச் செய்த தனித் துணையை ஆணவம் பழிவாங்க நினைத்ததுபோலும். அதனாலேயே தனித்துணையை மறக்க இந்த ஆணவமும் உதவிற்று.

இதனால் தனித்துணைக்கு எவ்விதக் கேடும் இல்லை. அது என்றும் தன் நிலை மாறாது. ஆதலின், 'தனித்துணை நீ நிற்க’ என்றார். அது மறக்கப்பட்ட நிலையில் ஆணவம் விஸ்வரூபம் எடுத்தது; ஆதலின், ‘யான் தருக்கித் தலையால் நடந்தேன்’ என்றார்.

குருவருள் பெற்ற அடிகளாருக்கு, என்றோ ஒருநாள் ஒரு விநாடியின் ஆயிரத்தில் ஒருபகுதி நேரத்தில், இது நிகழ்ந்தது போலும். தனித்துணையை மறந்தவுடன் மனம் விழித்துக்கொண்டது. பொறி, புலன்கள் துள்ளி எழுந்தன. இவற்றின் துணை கிடைத்தவுடன் ‘யான்' என்ற அகங்காரம் விஸ்வரூபம் எடுத்துத் தலையால் நடக்கலாயிற்று.

விநாடியின் ஆயிரத்தில் ஒரு பாகத்தில் நடைபெற்று முடிந்த இச் செயலைச் சென்ற பாடலின் கடைசி அடியிலும், இந்தப் பாடலின் முதலடியிலும் அடிகளார் பேசியுள்ளார்.

144.

வலைத் தலை மான் அன்ன நோக்கியர்
        நோக்கின் வலையில் பட்டு
மிலைத்து அலைந்தேனை விடுதி கண்டாய்
         வெள் மதியின் ஒற்றைக்
கலைத் தலையாய் கருணாகரனே
         கயிலாயம் என்னும்
மலைத் தலைவா மலையாள் மணவாள
        என் வாழ் முதலே 40


மிலைத்து-மருண்டு ; கதறி எனவுமாம்.