பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


இப்பாடலின் முதலடி சற்றுக் குழப்பத்தைத் தருவதாகும். வலையின்கண் அகப்பட்ட மானைப்போன்ற நோக்கியர் என்று பலரும் பொருள் கண்டுள்ளனர். இவ்வாறு பொருள்கொள்வதில் ஒரு சிக்கல் எழுகின்றது. மானுக்குள்ள மருண்ட பார்வை நீங்கிவிட, வலையில் பட்ட மானின் பார்வை பரிதாபத்தையும், ஆற்றறாமை யையும் வெளிப்படுத்துகின்ற பார்வையாகும். இத்தகைய பார்வையுடைய பெண்கள் என்று பொருள் கூறினால், அது பொருந்தாமை எளிதில் விளங்கும். இச்சிக்கலைப் போக்கப் பின்வருமாறு சொற்களை அமைத்துக் கொள்வது பொருத்தமுடையது போலத் தோன்றுகிறது:

‘மான் அன்ன நோக்கியர் நோக்கின் வலையிற்பட்டு, வலைத்தலை மான் அன்ன மிலைத்து அலைந்தேனை' என்று கொள்வதில் ‘மான் அன்ன' என்ற சொற்கள் இருமுறை பயன்படுத்தப்பெறுகின்றன. முதல் மான் அன்ன’ என்பது பெண்களுக்கும் இரண்டாவது ‘மான் அன்ன’ என்பது அடிகளாருக்கும் சென்று பொருந்துவதாகும்.

'நோக்கின் வலையிற்பட்டு’ என்பதால் இப் பெண்களின் நோக்கம், நோக்கப்படுபவரைச் சுற்றி வலைபோல் பின்னி அவரைச் செயலிழந்து நிற்கச் செய்கிறது என்பதாம். அவ்வாறு செய்யப்பெற்றமையால் வலையிற்பட்ட மானாக அடிகளார் ஆகி, மீண்டுவரும் நெறி அறிய முடியாமல் பரிதாபமாக விழிக்கின்றார் என்பதாம்.

'வாழ்முதல்' என்பது வாழ்க்கையின் மூலதனம் என்ற கருத்தைக் குறிப்பதாகும்.