பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீத்தல் விண்ணப்பம் * 185


தவிப்பர். அத்தகைய தம்மை விட்டுவிடவேண்டாம் என்கிறார் அடிகளார்.

சென்ற நாற்பத்தைந்து பாடல்களில் தம் சிறுமையைக் கூறி எந்த நிலையிலும் தம்மைக் கைவிட்டுவிடவேண்டாம் என்று அடிகளார் வேண்டிக்கொண்டதைக் கண்டோம்.

பலமுறை வேண்டியும் ஒருவர் இரங்கவில்லையானால் மனத்தில் ஓரளவு சலிப்புத்தட்டுதலும், அவரைக் குறை கூறுதலும் மனித இயற்கை.

அடிகளார் சராசரி மனித மனோநிலையிலிருந்து பலப்பல படிகள் மேலே சென்றுவிட்டவர். ஆதலின், தமக்கு இரங்காத இறைவனைக் குறை கூற அவரால் முடியாது. அதே நேரத்தில் குறை கூறவும் வேண்டும் என்ற எண்ணமும் மனத்தில் எங்கோ ஒரு மூலையில் ஒளித்திருக்க வேண்டும். இத்தகைய நிலையில் இரட்டுற மொழிதல் என்னும் உத்தியைக் கையாண்டு மிக அற்புதமாகப் பாடலின் பின்னிரண்டு அடிகளை அமைக்கின்றார்.

மேலோட்டமாகப் பார்ப்பதற்கு இறைவனைப் பழித்துப் பேசுவதுபோலக் காணப்பெற்றாலும் சற்று நின்று நிதானித்தால் குறைகூறுவதாகக் காணப்பெறும் இச்சொற்கள் உண்மையில் அவனுடைய பெருமையைக் கூறுவனவாகவே அமைந்துள்ளதை அறியமுடியும்.

வேலை நஞ்சு உண்(பவன்) என்பது நஞ்சையுண்ணும் பயித்தியக்காரன் என்ற பொருளைத் தருகிறது. அதன் உண்மைப் பொருள் ஆலகாலத்தை உண்டு பிரபஞ்சத்தைக் காத்தவன் என்பதாகும்.

‘மழைதரு கண்டன்’ என்பது சிவந்த மேனியில் கரிய நிறமாகிய அழுக்கை வைத்திருப்பவன் என்பது முதலாவதுபொருள். 'நீலகண்டாய’ என்று வேதமே கூறும் நீலகண்டன் என்பது இரண்டாவது பொருள்.