பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


'குணமிலி என்பதற்கு எந்த நற்குணமும் இல்லாதவன் என்பது முதலாவதுபொருள். தாமச, இராஜச, சத்துவ என்ற முக்குணங்களையும் கடந்து நிற்பவன் என்பது உண்மைப்பொருள்.

‘மானிடன்’ என்பதற்கு குணங்குறி கடந்த மூலப் பொருளைத் தாழ்ந்த மானிடன் என்று குறிப்பது முதலாவது பொருள். இறப்ப உயர்ந்தவர் கருணை காரணமாக மானிட குருவாக வந்தார் என்பது ஒரு பொருள்; மான்போன்ற உமாதேவியை உடையான் என்பது ஒருபொருள்; மானை இடக்கையில் உடையானை என்பதும் ஒரு பொருள். இவை மூன்றும் அவன் பெருமையைக் கூறியவாறாயிற்று.

'தேய்மதியன்’ என்பதற்கு புத்தி குறைந்தவன் என்பது முதலாவது பொருள். மூன்றாம் பிறைச்சந்திரன் தன்பால் சரணமடைய, அவனை ஏற்றுத் தலையில் குடிக் கொண்டான் என்று, சரணாகதன் என அவன் பெருமை கூறியது இரண்டாவது பொருளாகும்.

‘பழை தரு மாபரன்' என்பதற்கு மா அபரன் என்று பிரித்துப் பொருள் கொண்டால் பழமையான, மிகக் கீழானவன் என்பது முதலாவதுபொருள். முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளாய், மிக உயர்ந்த பரத்தின் தலைவன் ஆகவும் உள்ளான் என்பது உண்மைப் பொருளாகும்.

151.

பழிப்பு இல் நின் பாதப் பழம் தொழும்பு
       எய்தி விழ பழித்து
விழித்திருந்தேனை விடுதி கண்டாய்
       வெண் மணிப் பணிலம்
கொழித்து மந்தார மந்தாகினி
       நுந்தும் பந்தப் பெருமை