பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


குழைந்து-இளகி. வேசறுவேன்-வருந்துவேன். தேசு-ஒளி, காய்சின ஆலம்-எல்லாரையும் வருத்திய கோபத்தையுடைய விஷம். கடையவன்-எல்லார்க்கும் இறுதியாக அழியாது கடைசியாக இருப்பவன்.

‘ஐயனே! உன்னை ஏத்தியபோதும், இடையில் சில பாடல்களில் ஏசியபோதும் என் மனத்தின் அடித்தளத்தில் நின்மாட்டு நிறைந்த அன்பிருந்ததே தவிர வேறில்லை. அன்பின் அடிப்படையில் சொல்லளவில் ஏசினாலும் ஏத்தினாலும் எவ்விதத் தவறுமில்லை.'

'நின் அடியார் கூட்டத்தோடு செல்லாமல் இவ்வுலகிடை உடலோடு தங்கிவிட்ட என் தவற்றை நினைந்து மனங்குழைந்து வேசறுகின்றேன் (பெருந்துயரம் அடைகின்றேன்)' என்கிறார்.

‘தம் பிழையை நினைந்து வருந்தும் ஒருவரை மன்னித்து ஏற்றுக்கொள்ளுதல் பெரியோனாகிய நினது கடமையல்லவோ' எனவே, என்னை விட்டுவிட வேண்டா.

‘ஐயனே! எப்பிழை செய்தாலும் மன்னிப்பதுதான் உன் இயல்பு என்பதை நீ நஞ்சுண்டதால் அறிகின்றேன். நின்னை மதியாது அமுதைக் கடைய முற்பட்ட தேவர்கள் (சிற்றுயிர்), நஞ்சைக் கண்டு அலறி அடித்துக்கொண்டு நின்னைச் சரணமடைய, அவர்கள் செய்த பெரும்பிழையை மன்னித்தாய். அவர்கள் அமுது உண்பதற்காக, நீ அந்த நஞ்சை உண்டாய். அத்தகைய கருணைக் கடலான நீ, யான் செய்த சிறு பிழைகளைக் கண்டு வெகுள மாட்டாய் என்றே நம்புகிறேன். அன்றியும் என் பழைய பிழைகளை நினைந்து வருந்தி மனங்குழைந்து அழுகின்றவனாகிய என்னை மன்னித்து ஏற்றுக்கொள்வது உனது கடமையன்றோ!’ என்று முடிக்கின்றார்.