பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை * 199


இவ்வாறு கூறியதால் இப்பொழுது இந்தப் பெண்கள் பாடும் பாடல் வாலாயமாக இதுவரை இவர்கள் பாடி வந்த பாடல்போல் அல்லாமல், உள்ளக் குளிர்ச்சியும் உகப்பும் வெளிப்படப் பாடுகிறார்கள் என்பது தெளிவாகிறது. எனவே, இப்படி உள்ளக் கனிவிலிருந்து தோன்றும் பாடலைக் கேட்டும்கூட, கண்விழிக்காமல் படுத்திருப்பது, உறங்குகின்றவள் உள்ளத்தில் மலரவேண்டிய குளிர்ச்சியும் உகப்பும் இன்னும் தோன்றவில்லையோ என்ற ஐயத்தைத் தோற்றுவிக்கின்றது.

‘வளருதியோ’ என்ற சொல்லுக்குக் கண்ணையும் உடன்சேர்த்துக் கண்வளர்தல் அல்லது உறங்குதல் என்று பொருள் கூறியுள்ளனர். அவ்வாறு கொள்ளாமல் எம் பாடலைக் கேட்டுங்கூட வாள் தடங்கண் விழிக்காமல், மென்செவி வன்செவியாக மாற்றப்பெற்று, அகவளர்ச்சி குன்றி, உறக்கத்தின் மூலம் உடம்பை வளர்க்கின்றாய் என்ற பொருளும் பட 'மாதே வளருதியோ’ என்றார்.

படுக்கையில் கிடந்தபடியே உடம்பை வளர்க்கிறாள் இவள். ஆனால் புறத்தே, தெருவில் மற்றொரு வளர்ச்சி நடைபெறுகின்றது. மாதேவனுடைய வார்கழல்களை ஏனையோர் வாழ்த்துகின்றனர். உளங்கனிந்து உவந்து பாடும் அப்பாடலின் ஒலி வீதிவாய்ச் சென்று வளர்கின்றது. இந்த வளர்ச்சி அவளை ஒன்றும் செய்யவில்லையோ என்று ஐயுற்ற பெண்கள் வீதிவாய்க் கேட்டலுமே இவ்வளர்ச்சியில் ஈடுபடாமல் உறங்கித் தன் உடம்பை வளர்க்கிறாளே என்று ஒரு கணம் வருந்தினர்.

என்றாலும், பழைய தோழி ஆதலானும் இதுவரை இறையன்பில் உள்ளங் குழைந்தவள் ஆதலாலும் இப்பொழுது அவள் உறங்குகிறாள் என்று கருதாமல், அவள் எழுந்து வாராமைக்குக் காரணம் வேறு ஏதேனும் இருக்குமோ என்று தம்முள் பேசிக்கொள்ளுகின்றனர்.