பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை * 211


நாளைக்கு நான் என்ன செய்யப் போகிறேன் பார்' என்று கூறுவது மரபு.

இந்த அடிப்படையிலேயே இங்கு உள்ளே உறங்குபவள் முதல் நாள் இரவு பேசிய பேச்சை இப்பொழுது அவளுக்கு நினைவூட்டுகின்றனர். மான்போன்றவளே! நேற்று நீ என்ன சொன்னாய் தெரியுமா? நாளைக் காலையில் நான் ஒருத்தியாகவே வந்து உங்களை எழுப்பப்போகிறேன் பாருங்கள் என்று சொன்னாயே, அப்படி நீ கூறிய சொற்கள் எந்தத் திசையில் காற்றோடு போயின என்று சொல்ல முடியுமா? சொல்விய சொல்லைக் காவாது விட்டால் அதற்கு வெட்கப்பட வேண்டும். நீயோ நாணத்தையும் விட்டுவிட்டாய். இன்னும் பொழுது விடியவில்லையா? என்றனர்.

‘பெண்ணே நாங்கள் வெறும் பேச்சுப் பேசிக் கொண்டு இங்கு வந்து நிற்கவில்லை. விண்ணும் மண்ணும் பிறவும் அறிய முடியாதவன், அற்ப மனிதர்களாகிய நம்மாட்டுக் கொண்ட கருணையால், தானே இறங்கி வந்து நம்மை ஆட்கொண்டருளித் தன் திருவடிகளை நமக்குத் தந்துள்ளான். அப்படிப்பட்ட திருவடிகளை அல்லவா நாங்கள் புகழ்ந்துகொண்டு நிற்கின்றோம். நீ எழுந்து வந்து வாயிலைத்தான் திறக்கவில்லை என்றாலும், படுக்கையில் கிடந்தபடியே வாய்திறந்து ஒரு வார்த்தையேனும் பேசாமல் இருக்கின்றாய்’ என்றும் கூறுகின்றனர். இவ்விடத்தில் 'மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்' (திருப்பாவை:10) என்ற ஆண்டாளின் சொற்கள் நினைவு கூரத் தக்கவை.

‘நீ வாய் திறவாவிட்டாலும் வாசல் திறவாவிட்டாலும் உனக்கும், அவன் புகழைப் பாடும் எமக்கும், இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்திற்கும் தலைவனாக உள்ளவனைப் பாடுவோமாக’ என்கின்றனர்.