பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

272 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


இந்திரன் சுக போகங்களை அனுபவிப்பதற்காகவே மேலுலகில் வாழ்பவன். அந்த அனுபவச் செல்வத்தை அளிப்பவன் திருமால். இந்தச் செல்வமும் அனுபவமும் துவர்த்த பிறகு அவற்றின் நிலையாமையை உட்கொண்டு, ‘நான் யார்? என் உள்ளம் ஆர்?’ என்பனபோன்ற வினாக்கள் அறிவின் அடிப்படையில் தோன்றுகின்றன. அவ்வினாக்களின் பயனாக வானோர் பிரானே எம்தலைவன் என்ற முடிவை அந்த அறிவு தந்தாலும், அவனை அடைவதற்கு உரிய வழி துறைகளைத் தடுத்து, அந்த அறிவே ஆணவ வடிவங்கொண்டு நிற்றலின் அந்த அறிவின் தலைவனாகிய நான்முகனை மூன்றாவதாகக் கூறினார். ஏனோர், வானோர் என்பவர் மேலே கூறிய மூவருக்கும் கீழ்ப்பட்டு இடை நிற்பவர்கள் ஆவர்.

இவர்கள் அனைவருக்கும் அறியொணாதவன் என்றதால் அவனுடைய பெருமை கூறியவாறாயிற்று.

அத்தகையவன் யார் என்ற வினாவிற்கு விடை கூறுவார்போல, சிவன் என்ற பெயரைக் கூறினார். ‘அவனி வந்தருளி' என்றதால் குருவடிவில் வந்ததை நினைவூட்டினார்.

குருவடிவிற்கு விளக்கம் தருபவர்போல் 'தோள் கொண்ட நீற்றன்' என்றார். ஆட்கொள்ளப் படுபவரின் தராதரம் பாரது ஆட்கொண்டான் என்பதை 'எந்தரமும் ஆட்கொண்டு’ என்றார்.

சீரார் பெருந்துறையான் ஒருவர் உள்ளத்தில் புகுந்தான் என்பதை எவ்வாறு அறிந்துகொள்ள முடியும்? இதோ விடை கூறுகிறார் அடிகளார். நம்முடைய கட்டுப் பாட்டிற்கு அப்பாற்பட்டுச் சித்தத்தினுள்ளே உருக்கம் தோன்றினால், பெருந்துறையான் வந்தான் என்பதை அது அறிவிக்கும். அதனையே 'சிந்தனையை வந்து உருக்கும் சீரார் பெருந்துறையான்’ என்கிறார் அடிகளார்.