பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திரு அம்மானை * 273


‘பரிமேற் கொண்டான் தந்த அந்தம் இலா ஆனந்தம்’ என்பது அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சியைக் குறிப்பதாகும்.

இரண்டு பேரைப் பார்க்கும்பொழுது சிந்தை உருகி அந்தமிலா ஆனந்தம் கிடைத்தது. இந்த அனுபவத்தை முதலில் தந்தவர் குருநாதர். அவராவது அடியார் குழுவினிடையே குருநாதராக வீற்றிருந்தார். அவரைக் கண்டவுடன் சிவன் எனத் தேறினார் ஆதலின், ஆனந்தம் கிடைத்தது நியாயமானதே ஆகும்.

ஆனால், குதிரைச் சேவகனாக வந்த ஒருவன் சிவன்தான் என்று எவ்வாறு அடிகளார் தேறினார்? குதிரைச் சேவகனைக் கண்டவுடன் 'தாம் அமைச்சர்; வந்தவன் குதிரைச் சேவகன்' என்ற தராதரம் மறைந்தது. குதிரைச் சேவகன் பாண்டியனிடம்தான் பேசினான்; அடிகளாரிடம் பேசவில்லை; என்றாலும், என்ன அதிசயம்! அங்கு நிகழ்ந்தவற்றை இதோ அடிகளார். பேசுகிறார். ‘பரிமேல் கொண்டான் தந்த அந்தமிலா ஆனந்தம்’ என்ற தொடர் அதற்கு விடையாகும். திருப்பெருந்துறையில் சிவன் என முதலில் தேறினார்; பிறகு ஆனந்தம் கிடைத்தது. குதிரைச் சேவகனைக் கண்டவுடன் முதலில் ஆனந்தம் பெருகிற்று; எனவே, குதிரைச் சேவகனைச் சிவன் என்றே தேறினார் அடிகளார்.

178. வான் வந்த தேவர்களும் மால் அயனோடு இந்திரனும்
கான் நின்று வற்றியும் புற்று எழுந்தும் காண்புஅரிய
தான் வந்து நாயேனைத் தாய்போல் தலையளித்திட்டு
ஊன் வந்து உரோமங்கள் உள்ளே உயிர்ப்பு எய்து
தேன் வந்து அமுதின் தெளிவின் ஒளி வந்த
வான் வந்த வார் கழலே பாடுதும் காண் அம்மானாய் 4