பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

274 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


கான் நின்று வற்றி-தவஞ்செய்வதாகக் காட்டிற்புகுந்து உடல்வற்றி. புற்று எழுந்து-உடல்முழுதும் புற்றால் மூடப்பெற்று.

முன்னர்ப் பல இடங்களிலும் பேசியதுபோல இப்பாடலிலும் திருப்பெருந்துறை அனுபவத்தை நினைவுகொள்கிறார் அடிகளார்.

தேவலோகத்தில் உள்ள இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் அவ்வுலகத்திலுள்ள இன்பங்களை அனுபவிப்பதற்காக அங்கு உள்ளனர். அன்றி, அங்கிருந்தே தவம் செய்து வீடுபேற்றை அடைந்தார்கள் என்று குறிப்பிட ஒருவருமில்லை. உய்கதி அடைய விரும்பினால் இந்திரன் முதலாய தேவர்களும் பூவுலகிற்கு வந்து இறைவனை வழிபட்ட பின்னரே முன்னேற முடியும்.

தேவர்களும் காட்டினிடை வந்து பல காலம் தவம் செய்து அடைவதற்குரிய அத்திருவடிகள் தம்மைப் பொறுத்தவரை மிகமிக எளிதாகத் திருப்பெருந்துறையில் அறைகூவி ஆட்கொண்டன என்கிறார் அடிகளார்.

அங்குக் கிடைத்த அனுபவம் எத்தகையது என்பதை முன்னர்ப் பலகால் பேசிய அடிகளார், இங்கு மீட்டும் பேசுகின்றார். மயிர்க்கூச்செறிதல், உயிர்த்தல் ஆகிய உடம்பு நிகழ்வுகள் நான்காம் அடியில் பேசப்பெற்றுள்ளன.

குருநாதரின் அத்திருவடிகள் பெருமை வாய்ந்தன என்பதை 'வான் வந்த வார்கழல்’ என்கிறார். பருவடிவுடன் இருந்த அத்திருவடிகள் கண்ணுக்கு இதத்தையும், மனத்திற்கு அமைதியையும் தந்தது உண்மை தான். ஆனால், தேன், அமுது என்ற இரண்டையும் இங்கு எப்படி உவமை கூறமுடியும்? திருவடி கட்புலனுக்கு விருந்தாயதுபோலத் தேனும் அமுதும் நாப்புலனுக்கு விருந்து ஆயின. அப்படியானால் இந்த உவமையிலிருந்து பெறக்கூடிய கருத்து ஒன்று உண்டு.