பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திரு அம்மானை * 283


நாய் ஆன நம்தம்மை ஆட்கொண்ட நாயகனைத்
தாயானைத் தத்துவனை தானே உலகு ஏழும்
ஆயானை ஆள்வானைப் பாடுதும் காண் அம்மானாய் 7

உள்குவார்-தியானிப்பவர்கள். உள்ளான்-உள்ளீடானவன். சேயான்-தூரத்திலுள்ளவன். தத்துவன்-உண்மைவடி வானவன். உலகு எழும் ஆயான்-எழுலகங்களும் ஆனவன்.

நாயன்மார்கள், அடியார்கள் என்பவர்கள் உறவையும் உலகையும் துறந்துவிட்டு, காட்டுக்கு ஓடிக் கனசடை வைத்து, மூக்கைப் பிடித்துத் தவம் செய்யவில்லை. அவரவர்கள் எந்தச் சூழ்நிலையில் பிறந்தார்களோ, அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப இந்த உலகில் தத்தம் கடமைகளைச் செய்தனர். ஆனாலும் என்ன அதிசயம்! ஏனையோர் இறைவனை நாடிச் செல்ல, இறைவன் இவர்களை நாடியல்லவா வருகிறான்!

பெரிய புராணத்தில் காணப்பெறும் அத்தனை அடியார்களும் தத்தம் கடமைகளைச் செய்துகொண்டு இவ்வுலகிடை வாழ்ந்தவர்களே. இறைவன்தான் அவரவர்கள் எதிரே வெவ்வேறு வடிவத்துடன் வந்து இறுதியில் வீடுபேற்றையும் தந்தான்.

மூவர் முதலிகளைப் பொறுத்தமட்டில்கூட நடந்தது இதுவேயாம். கரையில் நின்று அழும் பிள்ளைக்கு இறைவனே ஓடோடி வந்து பால் தந்தான். திருமணக் கோலத்திலிருந்தவரிடம் தானே வந்து ஏசிய பேச்சையெல்லாம் கேட்டான்; ஆட்கொள்ளவும் செய்தான். நாவரசரைப் பொறுத்த மட்டில் களைத்து நின்றபொழுது தண்ணீர்ப் பந்தல் வைத்துக் கட்டமுது தந்தான்; கயிலை செல்லும் தளரா ஊக்கத்துடன் செல்பவரை இறைவன்தான் முனிவர் வேடத்தில் வந்து தடைசெய்து, கயிலைக் காட்சியை இப்பிறப்பிலேயே காணுமாறும் செய்தான்.