பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திரு அம்மானை * 305



அம்மானை ஆடுகின்ற பெண்கள் அம்மானைக் காய்களை மேலே தூக்கியெறிந்து மாறிமாறி இரண்டு கைகளிலும் அவை வந்து தங்கிவிடாமல் கைகளை மேலும் கீழும் அசைத்துக் காய்களை மேலே செலுத்துவர். அவ்வாறு செய்யும்போது இடையின் மேலுள்ள அவர்கள் உடம்பு இடப்புறமும் வலப்புறமும் அசையும் ஆதலின் அந்த அசைவால் நிகழும் நிகழ்ச்சிகளைக் 'கையார் வளைசிலம்ப.........' முதலிய தொடர்களில் குறிப்பிட்டார்.

'சேர்ந்தறியாக் கையானை எங்கும் செறிந்தானை’ என்ற தொடர்கள் முரண்பட்ட பொருளில் அமைந்து உள்ளன. கை என்ற சொல்லுக்கு இடம் என்ற பொருள் உண்டு. அவனுடைய அருள் இருந்தாலொழிய உயிர்கள் தம் முயற்சியால் சென்று சேர முடியாத இடத்தை உடையவன் என்று பொருள் கூறுவதே சரியாகப்படுகிறது.

உயிர்கள் சென்று அடையமுடியாத இடத்தை உடையவன் என்று கூறியவுடன், இவ்வுயிர்களின் வேறுபட்டுத் தனித்து எங்கோ இருப்பவன் என்ற எண்ணம் தோன்றுமன்றோ? அதனை மறுப்பதற்காக, உயிர்கள் சேர முடியாத இடத்தை உடையவன் என்றாலும், பிரபஞ்சம் முழுவதிலும் எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்துள்ளான் என்ற கருத்துத் தோன்ற எங்கும் செறிந்தானை என்றார். அதாவது எங்கும்.எல்லாவற்றிலும் செறிந்து நிற்பவனும் அதே நேரத்தில் உயிர்கள் சேர்ந்து அறியாத தனி இடத்தில் இருப்பவனும் அவன் ஒருவனே என்ற முரண்பட்ட கருத்தைதான் இத்தொடர்களில் கூறியுள்ளார். வேறாய் உடன் ஆனான்’ (திருமுறை:1;11-2) என்று காழிப் பிள்ளையாரும், தோய்ந்தும் பொருளனைத்தும் தோயாது நின்ற தொல் சுடரே' (கம்பன்.சரப-27) என்று கம்பநாடனும் கூறுவது இக்கருத்தையேயாம்.

‘கையானை’ என்பதிலுள்ள கை என்ற சொல் யாவரும் அறிந்த கை என்ற பொருளைத் தருவதோடு,