பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

324 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


சிவபுராணத்தின் இந்த அருமைப்பாட்டை அறிந்திருந்த நம் முன்னோர் நூலின் முதற்பாடலாக இதனை வைத்தனர். ஏனைய மூன்றும் அகவலாக இருக்கின்ற காரணத்தால் இதன் பின்னர்ச் சேர்த்தனர் என்று நினைப்பதில் தவறில்லை.

திருவாசகம் போன்ற அருட்பாடல்கள், இறையனுபவத்தில் மூழ்கியவர்கள், அவ்வப்பொழுது அதிலிருந்து வெளிப்பட்டு வந்து மூழ்கியிருந்த நிலையை நினைக்கும் பொழுது தோன்றியவையாகும்.

ஒரு காப்பியப் புலவனைப்போல ஒரு திட்டம் தீட்டிக் கொண்டு, 'முதலில் இதைப் பாடவேண்டும், அடுத்து இன்னது வரவேண்டும்’ என்ற முறையில் அருட்பாடல்கள் தோன்றவில்லை. முதல் பாடல் தொடங்கிவிட்டால் பத்து அல்லது இருபது பாடல்களை ஒருசேரப் பாடிவிட்டுத்தான் முடித்திருப்பார்கள் என்றும் சொல்வதற்கில்லை. பத்து என்ற அளவுவரை சென்று முடிப்பது தேவாரத்திற்கு உகந்ததாக இருக்கலாம். இறைவனை முன்னிறுத்தி, தம் எல்லையற்ற பக்தியை இடைநிறுத்தி, தாம் மூன்றாவதாக நின்றுகொண்டு பாடிய பாடல்களாகும் தேவாரங்கள். அப்பாடல்களைப் பாடியவர்கள், பாடலுக்குள் அமிழ்ந்து போகவில்லை. அவர்கள் தனியே நிற்பதால் பத்து என்ற திட்டம் பொருந்திவருவதாயிற்று.

திருவாசகம் இந்த வகையைச் சேர்ந்ததன்று. எல்லாப் பாடல்களிலும் பாடியவர் பாடலுக்குள் அமிழ்ந்து விடுகிறார்.

பாடியவரைத் தனியே பிரித்து, பாடல்களைத் தனியே பிரித்துப் பார்ப்பது ஒரு முறை. இவ்விதம் பார்ப்பதால் நம்முடைய கவனத்தை முழுவதுமாகப் பாடலில்மட்டும் செலுத்த முடியும். அதன் பயனாக, பாடலுக்குப் பதவுரை, பொழிப்புரை முதலியன காணமுடியும்.