பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

390 * திருவாசகம் – சில சிந்தனைகள் – 2


தாள் தாமரை காட்டி (180)

கண்ணார் கழல் காட்டி நாயேனை ஆட்கொண்ட (174)

என்னைத் தன்தொழும்பில் கொண்டருளும் வானவன் பூங்கழல் (188)

சிவன் கழலே சிந்திப்பேன் (191)

புவனியில் தீண்டிய குருநாதரின் சேவடி, தமக்கு என்ன செய்தது என்பதை ஐந்து இடங்களில் கற்பார் உள்ளம் உருகும் வகையில் அடிகளார் பேசியிருக்கின்றார். இதில் மிக முக்கியமான பகுதி 'எந்தரமும் ஆட்கொண்டு’ என்பதாகும். அதாவது, அருளைப் பெறத் தகுதி உள்ளவனா, இல்லையா என்று பாராமல் எம்போன்ற தரம் குறைந்தவர்களையும் ஆட்கொண்டான் என்று கூறுவதால், மனம் ஒடிந்து கிடக்கும் மனித சமுதாயத்திற்கு மாபெரும் நம்பிக்கையை ஊட்டுகின்றார் அடிகளார்.

...............சீரார் பெருந்துறையில்
எளிவந்து இருந்து இரங்கி எண் அரிய இன் அருளால்
ஒளிவந்து என் உள்ளத்தின் உள்ளே ஒளி திகழ
அளி வந்த அந்தணன்........... (192)

தான் வந்து நாயேனைத் தாய்போல் தலையணித்திட்டு (178)

நாயான நம்தம்மை ஆட்கொண்ட நாயகன் (181)

......................என்னையும் தன் இன்னருளால்
இப்பிறவி ஆட்கொண்டு இனிப் பிறவாமே காத்து (186)

என்பன போன்ற பகுதிகள் அத்திருவடிகளையும், அத்திருவடிகளுக்கு உரியவனாகிய பெருமான் தமக்கு என்ன செய்தான் என்பதையும் விரிவாக எடுத்துப் பேசுகின்றன.