பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னுரை * 393


கனியாக்கப்பட்ட அடிகளாரின் மனம் இறை அனுபவமாகிய தேனுள் மூழ்கி, எழுந்து உலகிற்குத் திருவாசகத்தைத் தரவேண்டும். ஆதலால், தன் கருணை வெள்ளத்து அழுத்தினான் என்கிறார். அழுத்தியதால் என்ன நிகழ்ந்தது? சஞ்சிதம், பிராரத்துவம், ஆகாமியம் என்ற மூன்று வினைகளும் அவரைவிட்டு நீங்கின. இவை அனைத்தும் நீங்கியபிறகு அங்கு வாதவூரரும் இல்லை, மணிவாசகரும் இல்லை. வினைகள் கடியப்பட்டவுடன் இறைவன் ஆணையை, திருவாசக வடிவில் தரும் ஒரு பிழம்பாகவே அடிகளார் ஆகிவிட்டார். இதன்பிறகு அவரைப் பொறுத்தவரை 'தன் பரிசும், வினை இரண்டும், சாரும் மலம் மூன்றும் அற, அன்புப் பிழம்பாய்' (பெ.பு: கண்ண: 154) திகழ்ந்தார். அந்தப் பிழம்பிலிருந்து தெறித்து விழுந்த சுடர்கள்தாம் திருவாசகப் பாடல்களாக முகிழ்த்தன.

இதனை அடுத்து வரும் 'தில்லை நகர்புக்குச் சிற்றம்பலம் மன்னும்' என்ற பகுதி இவருடைய குருநாதரை மட்டுமல்லாமல் அன்பு பிழம்பாய்த் திரிந்த இவரையும் குறிப்பதாகும்.


***