பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


என்ற சொல்லுக்குப் பொருள் காண்பது தவறாக முடிந்துவிடும்.

உள்ளே மறைந்து நிற்கும் பொருள் இதுவரை அவருக்குத் தெரியாமல் இருந்துவந்தது உண்மை. இப் பொழுது அப்பொருள் புறத்தேயிருந்து உள்ளே புகுந்ததாக அவர் நினைக்கின்றார். உள்ளத்தைக் கடந்தும் அதன் உள்ளேயும் இருப்பதால் 'கடவுள்' என்ற பெயரைப் பெற்ற அப்பொருள் மறுபடியும் உள்ளே புகுவதாக நினைப்பதில் தவறொன்றும் இல்லை.

கால்களின் உதவிகொண்டு புகுதல் அன்று இது. இதனையே கம்பநாடன் 'வாராதே வரவல்லாய்': (கம்பர்: விராதன்-54) என்று கூறுகின்றார். வருதலாகிய செயல் நடைபெறாமலும், வந்துவிடும் ஆற்றல் அப்பொருளுக்கு உண்டு. எனவே, அடிகளார் கூறும் புகுந்து’ என்ற சொல் இப்புதிய பொருளில் பொருள் கொள்ளப்படவேண்டிய ஒன்றாகும்.

என்றும் உள்ளேயுள்ள பொருளைப் புதிதாகப் புகுந்து ஆண்டான் என்று பேசிய அடிகளார், இப்பொழுது அப்பொருள் தம் உள்ளத்தை விட்டு நீங்கி வானத்திற்குச் சென்றுவிட்டது என்று நினைத்துப் பேசுகின்றார். இவை இரண்டு கூற்றுக்களும் உள்ளத்து உணர்ச்சியின் ஏற்றம், இறக்கம் என்ற அடிப்படையில் அடிகளாரின் உள்ளத்துள் தோன்றிய எண்ணங்களே தவிர, இறைவன் உண்மையில் புதிதாக அவர் உள்ளத்தில் புகவும் இல்லை, அவ் உள்ளத்தை விட்டு நீங்கி வானத்திற் சென்று தங்கிவிடவும் இல்லை. இறைவனின் இலக்கணத்தை நன்கு அறிந்த அடிகளார். இவ்வாறு கூறுவது அவருடைய மனத்துள் தோன்றிய மகிழ்ச்சியாலும் துயரத்தாலுமே தவிர உண்மையில் நடைபெற்ற ஒன்றன்று.