பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 45


     ஆண்டானே அவா வெள்ளக் கள்வனேனை
மாசு அற்ற மணிக் குன்றே எந்தாய் அந்தோ
      என்னை நீ ஆட்கொண்ட வண்ணம் தானே 24

பேசில் தாம்-தாம் பேசில் எனமாற்றுக. பின்றா-பின்னடையாத.

‘திருநீற்றை நிறையப் பூசி இறைவனுடைய திருநாமத்தைச் சொல்லிப் பிறவிக்கடலில் நீந்தும் அடியார்களை ஆட்கொண்டு அவர்கள் பிறப்பைப் போக்கும் பெருமானே! ஆசை என்னும் பெருவெள்ளத்தில் அமிழ்ந்து நிற்கும் என்னையும் ஆட்கொண்ட வண்ணம் எத்தகையது' என்று அவன் கருணையை வியந்தவாறு.

29.

வண்ணம்தான் சேயது அன்று வெளிதே அன்று
     அநேகன் ஏகன் அணு அணுவில் இறந்தாய் என்று அங்கு
எண்ணம்தான் தடுமாறி இமையோர் கூட்டம்
      எய்தும் ஆறு அறியாத எந்தாய் உன் தன்
வண்ணம்தான் அது காட்டி வடிவு காட்டி
     மலர்க் கழல்கள் அவை காட்டி வழி அற்றேனைத்
திண்ணம்தான் பிறவாமல் காத்து ஆட்கொண்டாய்
     எம்பெருமான் என் சொல்லிச் சிந்திக்கேனே 25

சேயதன்று-சிவந்ததன்று. இறந்தாய்-கடந்தாய். திண்ணம் தான் பிறவாமல்-உறுதியாக- அடியேன் பிறவி எடுக்காமல்.

மானிட குரு வடிவில் இருந்த ஒருவரைச் ‘சிவன் என யானும் தேறினன்’ என்று அடிகளார் குறித்ததை முன்னர்க் கண்டோம். இந்த முடிவிற்கு அவர் வரக் காரணமாய் இருந்தது குருவினிடம் இருந்து புறப்பட்ட தெய்விக அலைகள் என்றும் முன்னர்க் கூறியுள்ளோம்.

இப்பொழுது அடிகளார் அந்த முடிவிற்கு வர மற்றொன்றும் துணைபுரிந்தது என்றும் அறிய முடிகிறது.