பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 61


     தேனொடு பால் கட்டி
மிகுவது ஆவதும் இன்று எனின் மற்று இதற்கு
      என் செய்கேன் வினையேனே? 36

போதரவு-மீட்சி. பொன்னகர்-சிவபுரி. உகுவது-சுழலுவது. நெகுதல்-உருகுதல்.

பொன்னகர் என்று கூறப்பெறும் வீடுபேற்றில் புகுந்தவர்கள் அதிலிருந்து மீள்வதில்லை. அதில் புக வேண்டுமாயின் அவ்வுயிர் தன்னோடு ஒட்டிக்கொண்டு உள்ள அறுவகைக் குற்றங்களையும், ஆணவம் முதலிய மும்மலங்களையும் முற்றிலும் நீக்க(உகுக்க) வேண்டும்.

இக்குற்றங்களைப் போக்குதல் எதிர்மறை இயல்புகளே யாதலால், இவற்றோடு நின்றுவிடின் பொன்னகர் புகுதல் இயலாது என்பதைக் கூறவந்த அடிகளார், இவற்றை நீக்குவதோடு அல்லாமல் இறைவன் கழற்கு அன்பு நெகுவதாக இருத்தல் வேண்டும் என்கிறார்.

மேலே கூறிய பல்வகைக் குற்றங்களும் அவற்றில் ஈடுபட்டிருக்கும்போது நிலையற்ற சுவையையும், இன்பத்தையும், மகிழ்ச்சியையும் தருகின்றனவே. அவற்றைப் போக்கிவிட்டுக் கழற்கு அன்பு செய்தால் வீடுபேறு கிடைக்கலாம். ஆனால், இப்பொழுது சுவை ஏதேனும் கிடைக்குமோ என்று ஐயுறுவார்க்கு விடைகூறுவதுபோல அன்பு செலுத்தப்பெற்ற உடனேயே அமுது, தேன், பால், கட்டி என்பவற்றின் சுவை கிடைக்கும் என்கிறார்.

தேனும், பாலும், கட்டியும் உண்ணும்பொழுது பெருஞ்சுவை தருகின்றன. தேன் உண்ணும்பொழுது சுவை தருவதுடன் பின்னர் மருந்தாகி நோய் தீர்க்கவும் செய்யும். இறைவன் கழல் அன்பு செய்யும்போது சுவை தந்து பின்னர்ப் பிறவிப்பிணிக்கு மருந்தும் ஆதலின் தேன் என்றார்.