பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2



மாபெரும் சான்றோரும் அறிவாளியுமான அடிகளார் தம் நூலறிவு கொண்டு இறைவனை அடைய முயன்றிருத்தல் வேண்டும். எத்தனையோ பிறவிகளில் முயன்றும் கிட்டாத அது திருப்பெருந்துறையில் ஒரு விநாடியில் கிட்டி விட்டது. அந்த அனுபவத்தில் மூழ்கித் திளைத்த பிறகு ஒர் உண்மையை அடிகளார் கண்டார். எத்தனை பிறப்புக்களில் எவ்வளவு முயன்றாலும், அறிவின் துணை கொண்டு அவனை அறியமுடியாது. ஆனால், அவன் அருள் கிட்டினால் ஒரே விநாடியில் அவனை உணர்ந்து அனுபவிக்க முடியும். அனுபவத்தில் இந்த உண்மையைக் கண்ட பிறகு 'தன்மை பிறரால் அறியாத தலைவா’ என்று பாடுகிறார். அறியாத என்ற சொல்லைப் பயன்படுத்தியதன் மூலம் அறிவால் அறிய முடியாதவன் என்பது பெறப்பட்டது.

இந்த அனுபவம் மறைந்த நிலையில், மீட்டும் தம் முயற்சியால் அதனைப் பெறவேண்டும் என்று அவர் முயன்றிருக்க வேண்டும். அது இயலாமற்போகவே 'ஆண்டு ஐயா புறமே போக விடுவாயோ?' என்று பேசுகிறார். தம்மால் முடியாதபோது அவனும் தம்மை ஒதுக்கி விடுவானோ என்ற அச்சம் தோன்றவே ‘போக விடுவாயோ’ என்று அரற்றுகிறார்.

இப்பாடலில் முதன்முதலாகத் தோன்றிய இவ் வெண்ணம் நீத்தல் விண்ணப்பத்தில் விரிந்து செல்வதைக் காணலாம்.

64. புகுவேன் எனதே நின் பாதம்
போற்றும் அடியார் உள் நின்று
நகுவேன் பண்டு தோள் நோக்கி
நாணம் இல்லா நாயினேன்
நெகும் அன்பு இல்லை நினைக் காண
நீ ஆண்டு அருள அடியேனும்