78 * ஆண்டாள் பிள்ளைத்தமிழ்
எற்றிய தரங்கப் பயோததிக் குண திக்கில்
ஏமமால் வரையின்அணி கத்து
ஈண்டிய இருட்பிழம்பு எறிதர, வெயிற்பிழம்பு
எறிகதிர் வெதுப்பவேர் நீர்
வற்றலிற் பரிஅறை பிளந்துஉலவை முனம், மரா
மரம்நிரை தெளிர்ந்துமென் பூ
மல்கிநற வொழுகஒண் முகில்கமஞ் சூல்கொண்டு
வார்புனல் கவிழ்க்கஇகல் கூர்
கொற்றவன் கோட்புலிக் குருளைஆன் முலைஉணக்
கோக்குழக் கன்றும்உழு வைக் குவிமுலைப் பால்உனக் கண்ணன்வாய் வைத்தவேய்ங்
குழலிசைக்கு இணைஇது எனச்
சிற்றிடைப் பெருமுலைப் பூவைமார் குழைதரச்
செங்கீரை ஆடியரு ளே
செஞ்சொல் திருப்பாவை பாடித் தரும்பாவை!
செங்கீரை ஆடியரு ளே! (31)
வீசுகின்ற அலைகளையுடைய கடலுக்குக் கீழைத்திக்கில் உள்ள பெரிய மலைகளின் வரிசையால் நெருங்கி இருட்பிழம்பு செறிந்திருக்கும். இது ஒருபுறம். அப் பிழம்பு நீங்கும்படியாக மறுபுறம் வெயிற்பிழம்பை வீசுகின்ற ஞாயிறு வெதுப்புவதால், வேர் உண்ட நீர் வற்றியதால், மரங்களின் அடிப்பகுதி பிளந்து உலர்ந்து பொந்து ஆகி அழியும். மறுபுறம் மராமர வரிசைகள் தளிர்த்து மெல்லிய பூக்கள் நிரம்பும். அப் பூக்களிலிருந்து தேன் ஒழுகும்.
ஒள்ளிய முகில்கள் திறைந்த சூல்கொண்டு நீண்ட மழையைக் கவிழ்க்கும்.
மாறுபாடு மிக்க வெற்றியும் வலிமையும் கொல்லும் இயல்பும் கொண்ட புலிக்குட்டி, பசுவின் மடியில் பால்குடிக்கும். பசுவின் இளங்கன்று புலியின் குவிந்த மடியில் பால் உண்ணும்.
இந்த இனிய காட்சி கொண்ட சிற்றிடையும் பெரிய முலையும் கொண்ட மகளிர், இக் காட்சி கண்ணன் ஊதிய வேங்குழலிசையால்
நேர்ந்தது போலும் என்று மனம் இரகுவர்.
அப்படி அவர்கள் மகிழும்படி செங்கீரை ஆடியருள்! செவ்விய சொல்லாலான திருப்பாவை பாடித் தரும்பாவையே திருமொழி தந்தவளே! செங்கீரை ஆடியருள்!