85 3. தாலப் பருவம்
பிறங்கும் தவளக் கறைக்கவட்டுப்
பிறைக்கோடு உழக்கக் குளிறு திரைப்
பெருநீ ரினைமொண்டு எழுபருவப்
பேழ்வாய்க் கருவி முகில் பிளிற்றி
உறங்கும் அகக்காழ் அகிற் பொதும்பர்
உலவைப் பிறைக்கோட் டையும் உழக்க,
உலப்பில் களிவண்டு இழைத்த இறால் உக்க நறவ முடன் அமுதும்
கறங்கு புனலுள் கலந்தபல
கவின் சேர் திருமுக் குளத்தினொடும்
காமர் திருமுக் குளம் உளதால்
காதல் துணைஇல் வர்த்தினர் நல்
அறம்கண் டவர்வாழ் புதுவையின் பெண்
அமுதே தாலோ தாலேலோ! அரங்கத்து அமுதம் விரும்பியபெண்
அமுதே தாலோ தாலேலோ!
(37)
விளங்கிய வெண்ணிறத்தின யானைத் தந்தங்கள். அவை பகைவரைக் குத்தியதால் குருதிக் கறை படிந்திருக்கும். இரண்டாகப் பிளவுபட்ட பிறைபோன்ற அந்தத் தந்தங்கள், குத்தி உழக்கியதால் ஒலிக் கின்ற கடற்பெரு நீரினை மொண்டு எழுவன பருவ காலத்து முகில்கள். பிளந்த வாயால் கூட்டமான அம் முகில்கள் ஆரவாரம் செய்து உறங்கும் இடம் உள்ளுறுதிவாய்ந்த அகில் மரச் சோலை, அச் சோலையின் மரக் கொம்புகள், பிறையின் துனியை உழக்கும்.
அதனால் பிறையிலிருந்து அமிழ்தம் ஒருபுறம் ஒழுகிப் பாயும் அம் மதம் கொம்புகளில் அளவில்லாத களிவண்டுகள் கட்டிய தேன் கூடுகள் உடைந்து தேனருவியாகும். மறுபுறம் அகில் மரச் சோலையில் தங்கிய முகில்கள் வானில் ஏறி அமிழ்தம் எனப் பாற்றதாகிய நீரினைக் கொட்டும். அந்த நீர் திரண்டு இன்னொருபுறம் சிற்றாறாகப் பாயும்.