பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



திருவிளையாடற் புராணம்


1. இந்திரன் பழி தீர்த்த படலம்


சசியைப் பெற்று சாயுச்ய பதவி தாங்கிய இந்திரன் தன் அத்தாணி மண்டபத்தில் கொலு வீற்றிருந்தான். அரம்பை, ஊர்வசி, திலோத்தமை முதலிய ஆடல் மகளிர் நாட்டியம் ஆடினர் ; இசைக்கலைஞர் பலர் பாடல் பாடினர்; தேவர்கள் ஆடற் கலையையும் பாடற் கலையையும் நாடகக் கலையையும் கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தனர். இந்திரனும் அவ் இசைக் கலையிலும் நாட்டியத்திலும் மூழ்கிக் கிடந்தான். அவன் ஆசிரியராகிய வியாழன் என்று கூறப்படும் பிரகஸ்பதிவந்ததையும் அவன் கவனிக்கவில்லை. தையலர் அழகில் மையல் கொண்டிருந்த இந்திரன் ஐயன் ஆகிய ஆசிரியன் வந்ததையும். பொருட்படுத்தவில்லை; "வருக" என்று கூறி வரவேற்க வில்லை; "அமர்க" என்று கூறித் தன் இருக்கையைவிட்டு எழுந்திருக்கவும் இல்லை; களிப்புக் கடலில் மூழ்கிக் கிடந்தவன் விழிப்புத் திடலில் இருந்து செயல்படவில்லை.

பார்த்தார் ஆசிரியர்; சினத்தில் வியர்த்தார். மதியாதார் வாசல் மிதித்தது மரியாதைக் குறைவு என்று எதுவும் பேசாமல் வந்த வழியே திரும்பிச் சென்றுவிட்டார். அவர் சென்றதும் அவன் திடுக்கிட்டான். ஆசிரியர் எங்கே என்று கேட்டான்.

"தெரியவில்லை" என்று சொல்லிவிட்டார்கள்.