பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

திருவிளையாடற்புராணம்

என்னாமல் பசித்தவர்க்கு உணவு தந்து அறம் பல செய்தனர். சோதனை உண்டாக்க அவர்களுக்கு வறுமை தந்து வேதனை உண்டாக்கினார் இறைவன்.

கொடுத்துப் பழகிய அவர்களுக்கு வறுமை நிலை தடுத்து நிறுத்தியது. இந்த இழி நிலையை வெறுத்து இறைவனிடம் "பொருள் தருமாறு வேண்டினர்; இல்லா விட்டால் தன் உயிர் விடுப்பதாக அச்சுறுத்தினார்.

அவர்கள் உறுதியைக் கண்டு இறைவன் அவர்கள் அறம் செழிக்க எடுக்க எடுக்கக் குறையாத 'உலவாக் கோட்டை' என்ற சேமிப்பு உறையைத் தந்தருளினார்.

அவர்கள் தொடர்ந்து அறம் செய்து வாழ்ந்து இறைவன் அருளைப் போற்றி வாழ்ந்து முடித்தனர். 

39. மாமனாக வந்து வழக்குரைத்த படலம்

மதுரை நகரில் செட்டித் தெருவில் வணிகன் ஒருவன் செல்வனாய் வாழ்ந்து வந்தான். அவன் பெயர் தனபதி, அவன் மனைவியின் பெயர் சுசீலை. மக்கட்செல்வம் இன்றித் தன் தங்கையின் மகனைத் தத்து எடுத்து வளர்த்தனர். குழந்தை தன் உடைமை ஆகியதும் தன் தங்கையை அவனும் அவன் மனைவியும் மதிக்காமல் புறக்கணித்தனர்.

அவளுக்கு அதைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை; தன் மகனைக் கேட்டுத் திரும்பப் பெற்றுக் கொண்டாள். அதற்குப் பிறகு அவர்களுக்கு அந்த ஊரில் இருக்கப் பிடிக்கவில்லை. தன் சொத்து முழுவதையும் அந்தச் சிறுவனுக்கு எழுதி வைத்து விட்டுத் தேசாந்திரம் போய் விட்டனர். சென்றவர்கள் திரும்பி வரவே இல்லை.